MT New Diamond கப்பல் மாலுமி இலங்கையை விட்டு வெளியேறத் தடை - சட்டமா அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

MT New Diamond கப்பல் மாலுமி இலங்கையை விட்டு வெளியேறத் தடை - சட்டமா அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு

அண்மையில் தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் மாலுமிக்கு விளக்கமறியல் வழங்குமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ள கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், குறித்த மாலுமிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வசிப்பிடத்தில் மாற்றம் ஏற்படுமாயின், அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் குறித்த மாலுமிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றையதினம் (28) காலை 9.30 மணியளவில் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் குறித்த மாலுமி ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சட்டமா அதிபரினால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் பிற்பகலில் அறிவிப்பதாக நீதவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைக்கு அமைய, இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த கப்பலின் மாலுமி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜரானார்.

கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் பிற்பகல் 2.00 மணியளவில் முடிவை அறிவிப்பதாக, நீதிமன்றம் அறிவித்தது.

கடல் மாசுபடுத்தலை தடுக்கும் சட்டத்தின் கீழ், கப்பலின் மாலுமி சந்தேகநபராக பெயரிடப்படுவார் என, குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

கடந்த செப்டம்பர் 03ஆம் திகதி அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் வைத்து கப்பலில் ஏற்பட்ட தீப்பிடிப்பு தொடர்பில் உரிய நிறுவனத்திற்கு முறையான தகவல் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும், தன்னியக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சிஐடியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், கப்பலின் மாலுமி உள்ளிட்ட குழுவினர் உரிய முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment