உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கிறார் பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கிறார் பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர்

பெலாரஸ் ஜனாதிபதிக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை இன்று சந்திக்கிறார்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 

அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றி பெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6வது முறையாக ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

26 ஆண்டுகளாக ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டை நாடான லிதுவேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா பெலாரஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடைபெற்றும் களமாக பெலாரஸ் மாறி வருகிறது. 

இந்நிலையில், நேட்டோ படைகளின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இன்று லுதுவேனியா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டருக்கு ரஷியா ஆதரவு அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற ஸ்வியாட்லானா திட்டமிட்டுள்ளார். 

இதனால், இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அலெக்ஸ்சாண்டர் பதவி விலக ஐரோப்பிய யூனியன் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், பெலாரஸ் மீது பெரிய அளவில் பொருளாதாரத் தடைகள் விதிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேக்ரானிடம் ஸ்வியாட்லானா வேண்டுகோள் விடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பெலாரஸ் ஜனாதிபதி தேர்தல் முறைகேட்டால் நடைபெற்றதால் அலெக்ஸ்சாண்டரை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment