(நா.தனுஜா)
இலங்கையின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கு இத்தாலிய முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருப்பதாக அந்நாட்டு தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் றிரா கிலியானா மனெல்லா நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய துறைகள் பற்றி விசேடமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் விவசாயத்துறை மேம்பாடு மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இத்தாலி அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றுக்கு மேலதிகமாக உணவு உற்பத்தி, மீன் வளர்ப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இதன்போது பேசப்பட்டது.
சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரையில் பெருமளவான இத்தாலிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் கொண்டிருக்கலாம் என்று அந்நாட்டுத் தூதுவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். எனவே சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய, அதன் மேம்பாட்டிற்கு உதவக்கூடிய விடயங்கள் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமான இராஜதந்திரத் தொடர்புகள் 1952 ஆம் ஆண்டளவில் ஆரம்பமானதுடன், கடந்த 2016 ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் நகரில் கொன்சியூலர் அலுவலகம் திறக்கப்பட்டதுடன் இரு நாட்டுத் தொடர்புகள் மேலும் வலுவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment