சஹ்ரான் ஹாசிமின் செயற்பாடுகள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வுப் பிரிவு தமக்கு அறிவித்திருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று மீண்டும் சாட்சியமளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஜனநாயகம் மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்து கடும்போக்குவாத விடயங்களை பிரசாரம் செய்வது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம் முதல் இந்த பிரச்சினையில் உள்ள ஆழத்தை தான் புரிந்துகொண்டிருந்ததாக பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்புப் பேரவை கூட்டத்தின் போது பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்தின் கீழ் இல்லாத அரச புலனாய்வு சேவைக்கு இந்த செயற்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொறுப்பளித்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மறைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் சஹ்ரானும் அவரது குழுவினரும் குழப்பம் விளைவிக்க வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தமக்கு அறிவித்திருந்ததாக பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சஹ்ரான் ஹாசிமின் பேஸ்புக் பக்கத்தை முடக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கை தொடர்பிலான ஆவணங்களையும் அவர் இன்று ஆணைக்குழுவில் சமர்ப்பித்தார்.
No comments:
Post a Comment