(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் பல பிரதேசங்களில் இருக்கும் கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கைக்கமையவே கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள முன்வந்தேன். அடுத்து இரண்டு வருடங்களுக்குள் அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தும் நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வது தொடர்பாக இன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் பாரிய பின்னடைவை சந்தித்தோம். இருந்தபோதும் கட்சியையும் கட்சியின் கொள்கையையும் பாதுகாத்துக் கொண்டு தொடர்ந்து கட்சியிலே இருந்தேன். பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகாவிட்டாலும் கட்சியுடன் இருந்தமையிட்டு சந்தோசப்படுகின்றேன்.
அத்துடன் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு தகுதியான ஒருவரை பெயரிடுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய பலர் பெயரிட்டனர். ஆனால் அப்போது நான் தலைமைத்துவத்துக்கு பெயரிடவில்லை. அதன் பின்னரே எனது ஆதரவாளர்களும் கட்சி ஆதரவாளர்களும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து என்னுடன் தொடர்புகொண்டு தலைவர் தெரிவுக்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதன் பிரகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசிர்வாதத்துடன் கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கைக்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள தயார் என்ற செய்தியை முன்வைத்தேன்.
விழுந்திருக்கும் யானையை எழுப்புவது சாதாரண விடயமல்ல. என்றாலும் நாங்கள் ஒன்றுபட்டு கிராம மட்டத்தில் இருந்து செயற்பட்டால் ஓரிரு வருடங்களில் கட்சியை கட்டியெழுப்பலாம் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment