கிழக்கு கடல் பிராந்தியத்தில் தீப்பற்றி எரிந்துக் கொண்டுள்ள கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து இதுவரை 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான படகிலிருந்தவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாட்டிற்கு வருகை தந்திருந்த ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்காக ரஷ்ய தூதரகம் வழங்கிய அனுமதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இரண்டு யுத்த கப்பல்களும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இன்று நாட்டிலிருந்து திரும்பிச்செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
சங்கமன்கண்டி கிழக்கு பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பிராந்தியத்தில் “MT NEW DIAMOND“ என்ற எண்ணெய் கப்பல் இன்று 7.45 மணியளவில் விபத்திற்குள்ளானது. இந்த கப்பலின் மீட்பு பணிகளுக்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேவேளை, விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு விமான படையின் Beach Craft ரக விமானம் அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷாந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment