இந்திய பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து எம்.பி.க்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடாமல் உள்ளது. தற்போது சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தின் இரு அவைகளில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 14ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி வரை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டத்தை கொரோனா நெருக்கடிக்கிடையில் சிறப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர், எய்ம்ஸ், டிஆர்டிஓ டெல்லி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘எம்.பி.க்களுடன் பாராளுமன்றத்திற்குள் நுழையும் அமைச்சர்களின் அதிகாரிகள், மீடியா பிரதிநிதிகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். யாரும் யாரையும் தொடாத அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment