அரசின் ஒன்றரை இலட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தில் மலையக பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
இந்த திட்டத்தில் மலையகத்தில் வாழும் தொழிலற்ற முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரு பிரதான வேட்பாளர்களும் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற தற்போதைய ஜனாதிபதி 11 மாதங்கள் கடந்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது ஒன்றரை இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதில் மலையக பட்டதாரிகளும், பட்டம் பெறாதவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். முஸ்லிம் இளைஞர், யுவதிகளும் வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவிற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நியமனம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட 6,548 திட்டமிடல் உதவியாளர்களை கடமைக்கு சமூகமளிக்கும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல் கடந்த ஆட்சியில் நியமனங்கள் வழங்கப்பட்ட 1,300 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்.´ என்றார்.
No comments:
Post a Comment