(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் ஏனைய பகுதிகள் போன்று வடக்கு கிழக்கும் சமத்துவமாக கையாளப்படும் என நினைத்தோம். ஆனால் முற்று முழுதாக நாம் நிராகரிக்கப்பட்டுள்ளோம். அதேபோல் காணமால் போனோர் விடயத்திலும் எமக்கு தீர்வு கிடைக்கவுமில்லை, இதுவே சர்வதேச தரப்பை நாம் நம்பி செல்லவும் காரணமாகிவிட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததானது சரத் பொன்சேகா எம்.பி சபையில் எனக்கு அறிவுரை வழங்கினார். கவனமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். நானும் சில காரணிகளை அவருக்கு கூற விரும்புகின்றேன், நான் கூறிய விடயங்களில் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் இராணுவ தளபதியாக இருந்தவர், அதேபோல் இலங்கை என்பது சிங்கள மரம் போன்றதாகும், ஏனைய அனைவரும் இலைகளும், கிளைகளும் போன்றவர்கள் என கூறினீர்கள். வன்மையான கருத்துக்களாக இவற்றை கூறியதாக தெரிகின்றது, அவரது பதவி பரிபோனமைக்கும், சிறையில் இருந்தமைக்கும் இவைகளும் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. வேண்டுமென்றே திட்டமிட்டே அழிவுக்கு உற்படுத்தப்பட்ட பகுதியாகவே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் உள்ளது. 32 ஆண்டு கால யுத்தத்தில் முற்று முழுதாக எமது பகுதிகள் பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் வடக்கின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்.
இந்த காலகட்டத்தில் ஒரு லீட்டர் பெட்ரோல் 1500 ரூபாவிற்கு வாங்க வேண்டிய நிலைமை இருந்தது. எனினும் 32 ஆண்டுகளுக்கு பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் ஏனைய பகுதிகள் போன்று வடக்கு கிழக்கும் சமத்துவமாக கையாளப்படும் என நினைத்தோம். ஆனால் முற்று முழுதாக நாம் நிராகரிக்கப்பட்டுள்ளோம். வடக்கு கிழக்கு இந்த நாட்டின் ஒரு பகுதி, யுத்தத்தை எதிர்கொண்ட பகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் கொடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
ஆனால் இந்த அரசாங்கமும், முன்னைய அரசாங்கமும் அவற்றை செய்யவில்லை, ஒரு சமூகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் காணமால் போயுள்ள நிலையிலும் அவர்களின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இது குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் போனோர் குறித்த சர்வதேச தினம் வருகின்றது.
நாமும் இந்த நாளில் மக்களுடன் இணைந்து போராட்டத்திற்கு வலு சேர்ப்போம். இந்த விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தாது போன நிலையில் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றினை நம்பி நாம் செயற்பட்டு வருகின்றோம். மக்கள் அதற்காகவே எம்மை ஆதரித்துள்ளனர்.
அதேபோல் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் கஷ்டமான நிலையில் உள்ளனர். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சாட்சியங்கள் இல்லாத இவர்களை இனியும் தடுத்து வைக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment