(எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹிந்த தரப்புக்கு இனியொருபோதும் முஸ்லிம் வாக்குகளும் கிடைக்காது, பிரியாணியும் கிடைக்கப் போவதில்லை என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி, மெகட கொலன்னாவ பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நேற்று முன்தினம் தெஹிவளையில் முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில், தனக்கு புரியாணி கிடைத்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேசியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ் ஒருவிடயத்தை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கடந்த காலங்களில் புரியாணியாவது கிடைத்தது, இனிவரும் காலங்களில் அதனையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், சர்வதேச ரீதியில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு ஒழுங்கு விதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தாலும் இந்நாட்டில் பலவந்தமாக முஸ்லிம்கள் மீது அதிகாரம் தினிக்கப்பட்டது.
இதனால் முஸ்லிம்கள் மன உலைச்சலுக்கு ஆளாகினர். முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் அவை புறக்கணிக்கப்பட்டன. இந்நாட்டில் வேண்டுமென்றே முஸ்லிம்கள் நசுக்கப்பட்டனர்.
எனவே முஸ்லிம் மக்கள் தங்களது கவலையை தீர்த்துக்கொள்ள இந்த தேர்தலை பயன்படுத்துவார்கள். அதனால் மஹிந்த ராஜபக்ஷ் எதிர்பார்க்கும் புரியாணியும் கிடைக்காது வாக்கும் கிடைக்கப் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment