நீர்ப்பாசனம் பெறக்கூடிய வயல்களில் மாத்திரமே நெற்செய்கையை செய்ய வேண்டும் - மட்டக்களப்பு சிறுபோக நெல் அறுவடை விழாவில் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

நீர்ப்பாசனம் பெறக்கூடிய வயல்களில் மாத்திரமே நெற்செய்கையை செய்ய வேண்டும் - மட்டக்களப்பு சிறுபோக நெல் அறுவடை விழாவில் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக நெல் அறுவடை விழா சம்பிரதாயபூர்வமாக திங்கட்கிழமை 29.06.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்பிரதாய பூர்வ விசேட நிகழ்வு மட்டக்களப்பு புளுக்குணாவி நீர்ப்பாசனப் பிரிவின் முதலைமடு வட்டை மாவடி முன்மாரி பகுதியிலுள்ள பதின்மூன்று விவசாயக் கண்டங்களின் விவசாயிகள் முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா ஒன்றினை நடாத்தினார்.

பட்டிருப்பப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். சுபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் தேவகௌரி தினேஸ், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, கிழக்கு மாகாண நீரப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ். கணேசலிங்கம், மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் வீ. ராஜகோபாலசிங்கம் உட்பட பல அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு மாவட்டச் செயலாளர் கலாமதி கருத்துத் தெரிவிக்கையில் புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் 1500 ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு முந்திய காலத்தில் நீர்ப்பற்றாக்குறையாக இருந்தபோது அம்பாறை மாவட்ட செயலாளரின் உறுதுணையால் கலுகல் ஓயா நீர்ப்பாசனத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல் அறுவடையினை சிறப்பாக செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை மாவட்டச் செயலாளரின் பணியினை பாராட்டுகின்றேன்.
இதேவேளையில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகு வட்டப்பிரதேசத்தில் பெய்த பெரு மழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்களினை காப்பாற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் கழிமுகத்தைத் திறந்து விடுமாறு விடுத்த வேண்டுகோளை துறைசார் தொழிநுட்ப அதிகாரிகள் தெரிவித்த ஆட்சேபனையை அடுத்து நிறைவேற்ற முடியாததையிட்டு பெரிதும் கவலையடைகின்றேன்.

எனவே எதிர்காலத்தில் ஆரம்ப கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீர்ப்பாசனம் பெறக்கூடிய வயல்களில் மாத்திரமே நெற்செய்கையை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் நீப்பாசனம் இன்றி நெல்லை முழுமையாக அறுவடை செய்யமுடியாமல் போய்விடுமென ஏக்கமடைமந்த விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர்ப்பாசனத்தைப் பெற்றுத்தர முயற்சி செய்த மட்டக்களப்பு அரசாங்க மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவுக்கும் இதற்கு உறுதுணையாகவிருந்த அம்பாறை மட்டக்களப்பு நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கும் விவசாயிகளால் பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment