விருப்பு வாக்குகளுக்காக ஒரே கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுவது கடும் கவலையளிப்பதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு (24) தெரிவித்தார்.
இங்கு பேசிய அமைச்சர் அகிம்சையாக அரசியலில் ஈடுபடுபவர்கள் நாம். விருப்பு வாக்குகளுக்காக எனது ஆதரவாளரை சிலர் தாக்கியுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அரசியல் வாழ்வில் நான் எவருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தியதில்லை.
ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் மாத்திரமன்றி முழு நாடும் இதை அறியும். அகிம்சையே எனது நோக்கமாகும். எனது ஆதரவாளர்களுக்கும் இந்த அறிவுரையையே கூறியுள்ளேன்.
வாகனங்களில் செல்லும் போது கூட வேகத்தில் செல்ல வேண்டாமென அறிவிறுத்தல் வழங்கியுள்ளேன். இந்நிலையில்தான் எம்மீது வீரத்தைக் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு உயர்ந்த கருத்தினாலே நாம் பதிலளிக்க வேண்டும்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை மறப்பதற்கு நாம் தயாரில்லை. அன்று முதல் இன்று வரை எமது மாவட்ட மக்களுடனேயே இருந்து வருகிறேன். இதனை மக்களும் நன்கு அறிவர். எனவே கீழ்தரமான செயல்களை கண்டு அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை நிருபர்
No comments:
Post a Comment