ஆப்கானிஸ்தானில் சந்தைப்பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19ம் ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த உள்நாட்டுப் போரில் பயங்கரவாதிகள் அவ்வப்போது பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் இன்று வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து ரொக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த கொடூர தாக்குதலில் சந்தைப்பகுதியில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
சந்தைப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தான் நிகழ்த்தியுள்ளதாக் ஆப்கானிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment