மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 17 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 915 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்;ளுராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுஸர்கள் மூலமாக நீர் விநியோம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது.

மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் இடர் முகாமைத்துவப் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் வட்டவான், காயாங்கேணி, கட்டுமுறிவு, பனிச்சங்கேணி, மதுரங்குளம், பலாச்சேனை, மாங்கேணி மத்தி, கிரிமிச்சை, புணானை கிழக்கு, மாங்கேணி தெற்கு உட்பட கதிரவெளி உள்ளிட்ட பகுதிகளில் 1308 குடும்பங்களைச் சேர்ந்த 4553 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேரும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான், புணானை கிழக்கு பகுதிகளில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேரும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முறுத்தானை, பூலாக்காடு, குடும்பி மலை, வாகநேரி, புணானை மேற்கு உட்பட கிரான் மேற்கு பகுதிகளில் 1751 குடும்பங்களைச் சேர்ந்த 5810 பேரும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பன்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுல, குறிஞ்சாமுனை, நெடியமடு, பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, காந்திநகர், ஆயித்தியமலை, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை வடக்கு உட்பட வவுணதீவு பகுதிகளைச் சேர்ந்த 2694 குடும்பங்களைச் சேர்ந்த 8783 பேரும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பாலயடிவட்டை, பட்டாபுரம், விவேகானந்தபுரம், காந்திபுரம், திக்கோடை, தும்பங்கேணி, வீரச்சேனை, மாவற்குடா, நெல்லிக்காடு, புன்னகுளம், ரணமடு, சின்னவத்தை, மாலயர்கட்டு, வம்மியடியூத்து, களுமுந்தன்வெளி, கண்ணபுரம், ஆனைகட்டியவெளி, விளாத்தோட்டம், வெல்லாவெளி, மண்டூர் தெற்கு, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, தும்பங்கேணி, சங்கர்புரம் ஆகிய பகுதிகளில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19971 பேரும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம, கரடியனாறு, பெரியபுல்லுமலை, உறுகாமம், கோப்பாவெளி, கொடுவாமடு, கித்துள், பன்குடாவெளி, வேப்பவெட்டுவான், மரப்பாலம் உட்பட ஈரலக்குளம் பகுதிகளில் 2240 குடும்பங்களைச் சேர்ந்த 7190 பேரும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வறட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment