சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் சலூன்கள், அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் விரைவில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி தேவையான மாற்றங்களைச் செய்த பின்னரே சலூன்கள், அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்காக துரிதமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவான சம்மந்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர் மாத்திரம் இந்த நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்
இன்றைய தினம் சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் சில ஊடக அறிக்கைகளால் அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலை மயிர் வெட்டும்) இடங்களை நடத்தி வரும் நபர்கள் தவறாக புரிந்துகொள்வதற்கு இடமிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
தற்பொழுது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைக்கு அமைவாக செயல்படவேண்டும் இதற்கு மாறாக எந்த வகையிலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அழகு நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் விரைவாக வெளியிடப்படவுள்ளது.
அது வெளியிடப்பட்ட பின்னர் அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை நடத்தும் நபர்கள் தமது நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக எல்லைப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைவாக தமது நிலையத்தில் சேவையை வழங்கக்கூடிய வகையில் கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் மற்றும் கட்டமைப்பு பூர்த்தி செய்யப்பட்டமை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நிலையம் மற்றும் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது மக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களுக்கு விஜயம் செய்வர்.
ஆலோசனைகளுக்கு அமைவாக தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக அந்த இடங்களை பரிசோதனை செய்து பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் தமது சிபாரிசுகளை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். இந்த சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கும் சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும்.
இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வரையில் நாட்டில் எந்தவொரு அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு முயற்சிக்கக்கூடாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment