அமெரிக்காவில் ஜூன் மாதம் முதல் கொரோனாவால் தினமும் மூவாயிரம் பேர் பலியாகும் ஆபத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

அமெரிக்காவில் ஜூன் மாதம் முதல் கொரோனாவால் தினமும் மூவாயிரம் பேர் பலியாகும் ஆபத்து

அமெரிக்காவில் ஜூன் மாதம் 1ம் திகதி முதல் கொரோனா வைரசால் தினமும் 3 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று வெளியாகி உள்ள புதிய கணிப்பால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

வல்லரசு அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நாடு, பிற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது. கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அங்கு ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் திறந்து விடுகின்றன. ஜார்ஜியா, மிசிசிப்பி, டென்னிசி, டெக்சாஸ், இல்லினாய்ஸ், அலாஸ்கா, அரிசோனா, ஆர்கன்சாஸ், கொலரோடோ, புளோரிடா, கன்சாஸ், மின்னசோட்டா, மிசவுரி, மோண்டனா, நெப்ராஸ்கா, நியுஹம்ப்ஷயர், ஓஹியோ, தெற்கு கரோலினா, வெர்மாண்ட், மேற்கு வெர்ஜீனியா ஆகியவை கட்டுப்பாடுகளை நீக்கிய மாகாணங்கள் ஆகும்.

இந்த நிலையில் அங்கு உள்நாட்டு வரைவு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், வரும் ஜூன் மாதம் 1ம் திகதி முதல் கொரோனா வைரஸ் தாக்கி தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணித்து சொல்லப்பட்டுள்ளது. மேலும், தினசரி சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், “கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்கள், புத்திசாலித்தனமான யதார்த்தத்தை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளன. அதேநேரத்தில் அமெரிக்கா பதுங்கி உள்ளது. கடந்த 7 வாரங்களாக நிலைமையில் பெரிதான மாற்றம் எதுவும் இல்லை. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும்” என கூறுகிறது.

சமீபத்திய தகவல்படி, அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. 3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்றி, நிவாரணம் கோரி உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உள்நாட்டு வரைவு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும், தேசிய தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் நிராகரித்துள்ளன. அதேநேரத்தில் இந்த வரைவு அறிக்கையை தயாரித்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்று நோய் பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர், தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “வரைவு அறிக்கை எப்படி அதிகாரிகளால் தளமாக மாற்றப்பட்டது, செய்தி நிறுவனங்களுடன் பகிரப்பட்டது என எனக்கு தெரியவில்லை. அதேநேரத்தில் கட்டுப்பாடுகளை இவ்வளவு விரைவாக தளர்த்துவது என்பது, நிலைமையை விரைவில் மோசமாக்கி விடும், கட்டுக்குள் இல்லாமல் ஆக்கி விடும்” என குறிப்பிட்டார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜட் டீரெ கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிக்கை, வெள்ளை மாளிகை ஆவணமோ, கொரோனா வைரஸ் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமோ அல்ல. இந்த தரவு பணிக்குழு அல்லது தரவுகளால் செய்யப்பட்ட எந்த மாதிரியையும் பிரதிபலிக்காது” என குறிப்பிட்டார்.

மேலும், “அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் பல கட்டங்களில் திறப்பது என்பது விஞ்ஞான உந்துதல் அணுகுமுறை ஆகும். இது கூட்டாட்சி உயர் சுகாதார மற்றும் தொற்றுநோய் நிபுணர்கள் ஒப்புக்கொண்டதும் ஆகும். அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கிறார்” என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment