இராணுவ வெற்றியை அனுஸ்டிக்கின்ற போது ஏற்படாத தொற்று தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் போது தொற்றும் என எந்த விஞ்ஞானியும் எதிர்வுகூறவில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

இராணுவ வெற்றியை அனுஸ்டிக்கின்ற போது ஏற்படாத தொற்று தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் போது தொற்றும் என எந்த விஞ்ஞானியும் எதிர்வுகூறவில்லை

அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் வடக்கு-கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இருந்தும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை தமிழ் மக்கள் அனுஸ்டிக்கக் கூடாது என்ற வகையில் அரசாங்கத்தினால் பல விதமான கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக கொரொனா அச்சம் காரணமாக மட்டக்களப்பில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், சுகாதார நடைமுறையோடு கூடிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம்.

இருந்தும் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக் கொண்டு, அந்நிகழ்வினை செய்யவிடாமல் எம்மை ஏற்றிச் செல்வதற்கான வாகனங்களுடன் கட்சி செயலகத்திற்கு வந்து இடையூறு விளைவித்திருந்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு கூட கருத்துக்களை வெளிக் கொணரும் உரிமை மறுக்கப்பட்டதுடன், மட்டக்களப்பிலும், வாகரையிலும் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுளளது.

இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும் கடந்த காலங்களில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டிக்க சுதந்திரமான சூழ்நிலையொன்று காணப்பட்டது.

இருந்தும் இப்போது இருக்கின்ற ஆட்சி மாற்றம் காரணமாக தமிழ் மக்கள் இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாத வகையில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இதற்கு கொரொனா நோய்த் தொற்றினை காரணம் காட்டுகிறார்கள். மறுபுறம் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடுவதற்கு நூற்றுக்கணக்கான படையினரை அழைத்து செல்கிறார்கள். அதிலும் கூட வைரஸ் தொற்றுக்குள்ளான படையினரும் கலந்திருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இராணுவ வெற்றி தினத்தை அனுஸ்டிக்கின்ற போது ஏற்படாத தொற்று முள்ளிவாய்க்காலில் இறந்த தம் உறவுகளை நினைத்து அவர்களுடைய, கவலைகளை சொல்லி அழுது அஞ்சலி செலுத்தும் போது மாத்திரம் தொற்றும் என எந்த ஒரு விஞ்ஞானியும் எதிர்வுகூறவில்லை.

கொரோனா, துக்கத்தை அனுஸ்டிக்கும் போது மட்டும் தொற்றாது, வெற்றி கொண்டாட்டத்தின் போதும் தொற்றும் என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment