(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் சிலர் இதனை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
பேராயர் மேலும் தெரிவித்ததாவது அதிகாரமுடைய ஸ்தானத்திலிருந்து கொண்டு இவ்வாறு செயற்படுபவர்கள் அவர்களுக்கு எவ்வாறு வாழ்வதற்கான உரிமை இருக்கின்றதோ அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிழிழந்தவர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருந்தது. ஆனால் அதனைப் பறித்து தற்போது மனித உரிமை மீறல் பற்றி அவ்வாறானவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முற்படும் அதிகாரிகளை பழிவாங்க முற்படக்கூடாது.
பாதுகாப்புத்துறை நீதித்துறை என அனைவருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை இனங்காண்பது அவர்களின் பொறுப்பாகும்.
இதில் நீதித்துறையினருக்கென மாத்திரம் விசேட அம்சங்கள் இல்லை. சட்டத்தரணிகள் என்பதற்காக அவர்களது செயற்பாடுகள் நீதிமன்றத்தை கேள்விக்குட்படுத்த முடியாது என்றார்.
No comments:
Post a Comment