கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது கடற்படை வீரரும் பூரண குணமடைந்தார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது கடற்படை வீரரும் பூரண குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரண்டாவது கடற்படை வீரரும் பூரண குணமடைந்து முல்லேரியா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக குறித்த கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து நேற்று (04) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

பொலன்னறுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது கடற்படை வீரருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த வெலிசறை முகாமைச் சேர்ந்த இக்கடற்படை வீரர், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். 

இதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக அன்றையதினமே முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, வைத்தியசாலையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்த 03 PCR பரிசோதனைகளின் மூலம் அவரது உடலில் வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இக்கடற்படை வீரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைக்களுக்கு அமைய, மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட இக்கடற்படை வீரர் உட்பட இரு கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment