ஜூன் 20 பொதுத் தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

ஜூன் 20 பொதுத் தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

(எம்.எப்.எம்.பஸீர்) 

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத் தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

சட்டத்தரணி சரித்த குணரத்னவால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவையே இவ்வாறு திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி கடந்த 2 ஆம் திகதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அரசியலமைப்பின் 104 (அ) சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி இப்பத் சஹாப்தீன் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசியலமைப்பு ஊடாக மனுதாரருக்கு கிடைக்கும் உரிமைகளான அரசியலமைப்பின் 12(1), 14,27 ஆம் சரத்துக்கள் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் கடந்த 20.04.2020 அன்று 2,3,4 ஆம் பிரதிவாதிகளால் (தேர்தல்கள் ஆணைக் குழு உறுப்பினர்கள்) வெளியிடப்பட்ட ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தான 2172/03 ஆம் இலக்க வர்த்தமானியை செயலிழந்ததாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். 

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி வேட்புமனுக்களை கையேற்று, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை இரத்து செய்து ஜூன் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்தமை, தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், சட்டத்திற்கு முரணான விடயம் எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொரோனா தொற்று நாடு முழுவதிலும் பரவிவரும் சூழ்நிலையில், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நாட்டு மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு விடயம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கும் படியும், மனுவை விசாரித்து முடியும் வரை பொதுத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க 2 முதல் 5 வரையிலான பிரதிவாதிகளுக்கு (தேர்தல்கள் ஆணைக் குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர்) இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். 

No comments:

Post a Comment