(நா.தனுஜா)
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்கும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா 1.3 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்திருக்கிறது.
இந்நிதியுதவி சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெக்க முகவர் நிலையத்தின் ஊடாக வழங்கப்படும்.
'கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளின் போது இலங்கையர்களும், அமெரிக்கர்களும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டிருக்கிறார்கள்' என்று இது குறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த வகையில் இவ்வுதவி ஒரு உலகளாவிய தொற்று நோய் நெருக்கடியின் போதுகூட இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலங்களிலும் இலங்கைக்கு இத்தகைய உதவிகளை வழங்கியதையிட்டுப் பெருமையடைகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், இச்சவாலை எதிர்கொள்வது தொடர்பில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறல், நெருக்கடிநேரத் தொடர்பாடல், தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா இலங்கைக்கு இந்நிதியுதவியை வழங்குகின்றது.
மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் கலந்திரையாடல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment