வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருப்பதாக தென் கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை என்பதால் அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
வட கொரியாவின் ரெசார்ட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் செட்டலைட் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இப்படி கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அண்டை நாடான தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது குறித்து தென் கொரியாவில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் மூன் சுங் இன் கூறுகையில், “வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருக்கிறார். கடந்த ஏப்ரல் 13ம் திகதி முதல் வோன்சன் நகரில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை சார்ந்து சந்தேகத்துக்கு இடமான விஷயங்கள் ஏதும் நடக்கவில்லை” என கூறினார்.
எனினும் கிம்மின் உடல் நலம் குறித்த எந்த தகவலையும் வட கொரியா அரசு இதுவரை தெரிவிக்காதது அவர் உடல் நலன் சார்ந்த சந்தேகங்களை மேலும் வலுவடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment