சம்மாந்துறை துப்பாக்கி விவகாரம் : இராணுவக் கெப்டன் தர அதிகாரிக்கு இடமாற்றம் - கைதான ஐவரையும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

சம்மாந்துறை துப்பாக்கி விவகாரம் : இராணுவக் கெப்டன் தர அதிகாரிக்கு இடமாற்றம் - கைதான ஐவரையும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்பு

பாறுக் ஷிஹான்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு 9.30 மணியளவில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது, துப்பாக்கிச்சூடு இடம்பெற்றமை தொடர்பில் கைதான ஐவரையும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முதலில் செவ்வாய்க்கிழமை (21) ஒரு சந்தேக நபர் கைதான நிலையில், துப்பாக்கிச்சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய 4 சந்தேக நபர்களை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் முன்னெடுத்த நிலையில், தற்போது பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபருடன் நெருங்கிப் பழகிய அப்பகுதி இராணுவக் கெப்டன் தர அதிகாரியொருவருக்கு தற்போது வட பகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விராணுவ அதிகாரிக்கு பிரதான சந்தேக நபர் மோட்டார் சைக்கிளொன்றினையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன், அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38, 42, 40 மற்றும் 27 வயதுடையவர்களாவர். இவ்வைந்து சந்தேக நபர்களும் குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும், துப்பாக்கியைத் தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்த குற்றச்சாட்டிற்காகவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை, ஏதாவது பயங்கரவாதக் குழுவினருடன் தொடர்புள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பிரதான சந்தேக நபர் செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னிணைப்பு
கடந்த திங்கட்கிழமை (20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது, துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர் மறுநாள் கைதாகியிருந்தார்.

குறித்த கைதான சந்தேக நபரைத்தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேலதிகத்தகவலைப் பெற்ற பின்னர் வியாழக்கிழமை (23) இன்று சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐச்சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரைக்கைது செய்துள்ளனர். இவ்வாறு இரண்டாவதாக கைதான சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு துப்பாக்கிச்சுடுவது குறித்து பயிற்சியளித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இரண்டாவது சந்தேக நபரது இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஏலவே, மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை, அதனைப்பயன்படுத்த உதவி செய்தமை, துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இது தவிர, பயங்கரவாதக் குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா? என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டுத்தயாரிப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை (20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்ணாயக்க நெறிப்படுத்தலில் கல்முனைப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின் நேரடிக்கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கிச்சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் (செவ்வாய்க்கிழமை -21) 26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment