இந்தியாவில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை : கங்குலி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை : கங்குலி

கொரோனா வைரஸ் மனித உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியாவில் தற்போதைக்கு கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைந்தபோது மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் போட்டிகள் நடத்தினால் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தது. 

இந்நிலையிலேயே, பி.சி.சி.ஐ. மார்ச் 29 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவிருந்த 13 ஆவது ஐ.பி.எல். தொடரை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது. எனினும், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். தொடரை மறு அறிவிப்பு வரும் வரை பி.சி.சி.ஐ ஒத்திவைத்தது. 

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கிடையே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் மனித உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பி.சி.சி.ஐ. தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ஜேர்மனிக்கும் இந்தியாவுக்கும் சமூக யதார்த்தத்தில் வேறுபாடு உண்டு. விரைவில் இந்தியாவில் கிரிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. ஏராளமான விடயங்கள் உள்ளன. 

மிகவும் முக்கியமானது, மனித உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளபோது, விளையாட்டு பற்றி நான் யோசிக்கவில்லை. மேலும், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த நீண்ட காலம் ஆகலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment