கொரோனா வைரஸ் நெருக்கடி கூடிய விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. பல நாடுகள் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த வைரஸ் எங்களுடன் நீண்ட நாட்கள் இருக்கப் போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே பல நாடுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உலகளாவிய நோய் தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வைரஸ் பரவல் தொடர்பில் கவலை தரும் போக்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியை இடைநிறுத்தும் முடிவை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் உயிர்களை காப்பாற்றுவதற்கான எங்களின் முக்கிய பணிக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவளிக்கும் எனவும் டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இது முக்கியமான முதலீடு என கருதும் என நான் எதிர்பார்க்கின்றேன், ஏனையவர்களை மாத்திரமல்ல அமெரிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கும் அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் இந்த நிதி உதவி முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment