கல்முனையில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டாக்டர் ஜீ.சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

கல்முனையில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டாக்டர் ஜீ.சுகுணன்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவைப் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் முப்படையைச் சேர்ந்த படையினர் தங்குவதற்காக 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

முப்படையினரின் விடுமுறை அரசாங்கத்தினால் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்ட நிலையில், தத்தமது முகாமிற்கு மீண்டும் வருகை தரும் முப்படையினரை தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், தற்போது அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் இதுவரை 158 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 74 பேரும், காஞ்சினங்குடா கால்நடை பயிற்சி மையத்தில் 44 பேரும், கல்முனை விகாரையில் 40 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முப்படையினரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது முகாம்களில் இடப்பற்றாக்குறையினால் இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. இவர்களால் எவ்வித ஆபத்துமில்லை. இவர்கள் சாதாரண இராணுவ, கடற்படை வீரர்களாவர் என்பதைத் தெரிவிக்க விரும்புவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகவும், அம்பாறைப் பிராந்தியத்தில் பொத்துவில்-பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம், உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம், ஆகிய 03 பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுவிப்பில் நிற்கும் முப்படையினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பாதுகாப்பமைச்சால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தமது கடமைக்குத் திரும்ப வசதியாக கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இத்தனிமைப்படுத்தல் நிலையங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment