கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்து வந்த இருவர் கைதாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (25) மற்றும் திங்கட்கிழமை (27) மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இரு சந்தேக நபர்கள் கைதாகியதுடன், இரு வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (27) சீல் சாராயத்தை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் கைதானார். கைதானவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் காயத்திரி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (25) கசிப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடா எனும் மூலப்பொருளை வைத்திருந்த நிலையில் கைதானவரை நாளை வியாழக்கிழமை (30) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைக்காக கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகரான எனது வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற மதுவரிப்பரிசோதகர் ரி.நளீதரன் மற்றும் உத்தியோகத்தர்களான எஸ்.புவனேசன், கே.செந்தில் வண்ணன், நித்தியானந்தன், பத்மசிவம், தலதாவத்த ஆகியோரே இச்சந்தேக நபர்களைக்கைது செய்தனர்.
No comments:
Post a Comment