மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை - டாக்டர் ஜீ.சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை - டாக்டர் ஜீ.சுகுணன்

பாறுக் ஷிஹான்

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கையெடுத்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு இன்று புதன்கிழமை (29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், முஸ்லிம்களின் ரமழான் பண்டிகை நாளை முன்னிட்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அதேவேளை, வீடுகளிலிருந்து இந்த பண்டிகையைக் கொண்டாடுங்கள். இறைவனைத் தியானிப்பதையும், வீட்டிலேயே இருப்பதையும், மக்களுக்கு உதவுவதையும் முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

எமது சுகாதாரப் பணிமனை கொடுத்த ஆலோசனையைப் பின்பற்றி வீதிகளில் போக்குவரத்து செய்வதை நாங்கள் காணவில்லை. வியாபார இஸ்தலங்களை வைத்திருப்பவர்கள் அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. பல குறைபாடுகள் தென்பட்டாலும், இந்த பண்டிகை காலத்தில் இறைச்சியின் தேவை அதிகரித்துக் காணப்படுவதால், மக்களுக்கு கொடுக்கின்ற உணவின் சுகாதாரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

அதன் நிமித்தம் ஆடு, மாடுகள் அறுக்கப்படுகின்ற மடுவங்களை ஆராய்ந்ததுடன், இதில் எமது சுகாதாரப் பணிமனையின் கீழுள்ள பிரதேசங்களில் 9 மடுவங்களில் மூன்று மாத்திரம் அதற்குரிய சுகாதார முறைகளுடன் காணப்பட்டது.

ஏனைய ஆறு மடுவங்களையும் உடனடியாக மூடச்சொல்லி இருக்கின்றோம். பிரதேச சபைகள் முன்வந்து மடுவங்களைத் திருத்தங்கள் செய்யாத வரை இந்த உத்தரவு தொடர்ச்சியாகக் காணப்படும்.

எமது பிரதேசங்களில் வெள்ளிக்கிழமைகளில் அதிகமான மக்கள் கடற்கரையில் கூடுவதைக்காண முடிகின்றது. இவ்வாறான ஒன்று கூடலைத்தவிர்த்து, வீட்டுக்குள் தனித்திருந்து, பொதுச்சுகாதார நடைமுறைகளைக் கைக்கொண்டவர்களாக எங்களை மாற்றி தேசிய நெருக்கடிக்கு ஒன்றிணைந்து போராட வேண்டுமென அனைவரையும் அன்பாக வேண்டிக்கொள்கிறேன்

மேலும், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை நிலையங்களை மத்திய அரசே தெரிவு செய்கின்றது. அந்த வகையில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையா? பாலமுனை வைத்தியசாலையா? என மத்திய அரசே முடிவு செய்கின்றது. அதேற்கேற்றாற் போல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

கொரோனா தொற்று சம்பவிக்கக்கூடிய ஏது நிலை கொண்டவர்களாக வயது முதிர்ந்தவர்கள், நாட்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள் காணப்படுகின்றனர். நிச்சயமாக, இவர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்க வேண்டியவர்கள். அவசியத்தேவையன்றி, வெளியில் வரக்கூடாது.

பல நேரங்களில் இவர்களை வீதிகளில் நடமாடுவதைக் காண்கின்றோம். முதியவர்கள் வியாபாரம் செய்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் பொருட்கொள்வனவுக்காக குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். அபாயகரமானவர்கள் தயவு செய்து வெளியில் செல்வதைத்தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட நோய் பரவலையடுத்து, 200க்கு அதிகமான கடற்படையினர் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயம்.

அதனைத்தொடர்ந்து நாங்கள் முன்னணியிலிருந்து வேலை செய்கின்ற முப்படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமுகமாக, எமது கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பொலிஸ் நிலையங்கள், முப்படையினருக்கும் விழிப்புணர்வுத் திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கின்றோம்.

முகாம்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நாங்கள் கரிசினை கொண்டவர்களாக இருக்கின்றோம் எனக்கூறினார்.

No comments:

Post a Comment