அரசாங்கத்தின் வேண்டுகோள்களை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும், எதிர்வரும் வாரங்கள் நிச்சயமற்ற சிவப்பு வாரங்களாக சுகாதாரத்துறை அடையாளப்படுத்தியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

அரசாங்கத்தின் வேண்டுகோள்களை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும், எதிர்வரும் வாரங்கள் நிச்சயமற்ற சிவப்பு வாரங்களாக சுகாதாரத்துறை அடையாளப்படுத்தியுள்ளது

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டின் நிலமை படுமோசமாக பாதிப்படையும் என்பதை ஒவ்வொருவரும் மனதிற் கொண்டு அரசாங்கத்தின் வேண்டுகோள்களை மதித்து செயற்பட வேண்டும். என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கையில், மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளே இன்று கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபட முடியாமல் பெரும் உயிர்ச் சேதங்களையும் சொல்லணாத் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் உயிரிழப்புகள் இருபதாயிரத்தை தாண்டியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இந்நிலைமையில் எம்மைப் போன்ற வளர் முக நாடுகள் மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும். உயிரிழப்புகள் ஏதும் இதுவரை இடம்பெறாத போதிலும் நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றியிரண்டை எட்டியுள்ளதை சாதாரணமாக எண்ணி விட முடியாது. 

அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களும் நிச்சயமற்ற சிவப்பு வாரங்களாக சுகாதாரத்துறை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் இதனுடைய பாதிப்புக்கள் 20 ஆயிரத்தை எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. 

ஜனாதிபதி பிரதமர் உள்நாட்டு அலுவல்கள் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு எனது வன்னி மக்கள் சார்பான விடயங்களை நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். கொரோனா தொற்று தொடர்பான விடயங்களிற்கும் சிவில் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களிற்குமாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பசில் ராஜபக்ஷ்வின் நெறிப்படுத்தலில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்த செயலணி பொதுமக்களின் நலன் கருதி சிவில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மருந்து பொருட்கள் விநியோகம் தொடர்பான விடயங்களை விஷேடமாக கவனிப்பதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர். அத்துடன் மருந்து பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், எரிவாயு போன்றவற்றை தேவையானவர்களுக்கு வீட்டுக்கே கொண்டு சென்று கொடுப்பதற்கான வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது இங்கே வரவேற்கத்தக்கதாகும். 

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டின் நிலமை படுமோசமாக பாதிப்படையும் அபாயத்தை நாம் ஒவ்வொருவரும் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். அரச மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு நாம் கட்டுப்படாத பட்சத்தில் அதிக உயிர்ச் சேதங்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும். 

எமது நாட்டின் சுகாதாரத்துறையினர் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இவ்வேளையில் பொதுமக்களாகிய நாங்கள் நோய்த்தொற்றுக் கெதிரான மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைப்பிடிதொழுகுவதன் மூலம் இந்நோயை முற்றாக ஒழித்து விடமுடியும். 

மிக விரைவாக தொற்றக் கூடிய இக்கிருமிகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தின் நோக்கத்தை பொதுமக்கள் அறிந்து ஒன்று கூடல்களை இயன்றளவு தவிர்த்து தனிமைப்படுத்தலை கடைப்பிடித்தொழுகுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் அரசாங்கம் இந்த இக்கட்டான தருணத்தில் பொதுமக்களுக்கு லீசிங் வங்கிக் கடன் மின் தண்ணீர் கட்டணங்களை செலுத்தும் காலப்பகுதிகளை நீடித்துள்ளதுடன் சில உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளமைக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். 

சுகாதாரத் துறையினர் முப்படையினர் பொலிஸார் ஆகியோர் தங்களது உயிரையும் துச்சமாக மதித்து இந்த நோய் தொற்று ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையும் முற்று முழுதாக பங்களிப்பினை வழங்கி ஆற்றுகின்ற சேவைகளுக்கு எனது மனமுனர்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 

சகல அரசியல் தலைமைத்துவங்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் அரசியல் மற்றும் ஏனைய சகல வேறுபாட்டிற்கு அப்பால் ஒரு குழுவாகச் செயற்பட வேண்டிய முக்கியமான தருணமாகும். எனவே இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒரே குழுவாகச் செயற்படுவதற்கு உங்கள் அனைவரையும் முன்வருமாறு வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment