பாறுக் ஷிஹான்
கிழக்கில் அனைத்து பள்ளிவாசல் தலைமைகளை ஒருங்கிணைத்து முஸ்லிம் மக்களின் இருப்பை பாதுகாக்க திட்டங்களை வகுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (1) மாலை மாளிகைக்காடு பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் கிழக்கின் அரசியல் தலைமைகளை உருவாக்க வேண்டும். அத்துடன் கிழக்கிலுள்ள பள்ளிவாசல் தலைவர்களை ஒன்றிணைத்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாய்ந்தமருது பிரதேச தோடம்பழ உறுப்பினர்கள் எமது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்முடன் இணைந்து சாய்ந்தமருது பிரதேச தோடம்பழ உறுப்பினர்கள் அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடப்போவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளனர் என கூறினார்.
எனவே வாக்குகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவையாற்றவே நாம் தேர்தலில் இறங்கியிருக்கின்றோம். ஏனைய அரசியல் கட்சிகளை போன்று வாக்குகளுக்காக திட்டம் தீட்டி சதி செய்து செயற்படுவதில்லை எனவும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அரசியல் தலைமைகள் எவரும் இல்லை என கூறினார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிற்போடப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment