திருகோணமலை நகர சபையின் புதிய உப தலைவராக இலங்கை தமிழரசு கட்சியின் திருக்கடலூர் வட்டார உறுப்பினர் காளிராஜா கோகுல்ராஜ் இன்று (03) தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்ற இந்த தெரிவு நிகழ்வின் போது 15 உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே உப தலைவராக இருந்த திரு சே.சிறிஸ்கந்தராஜா இப்பதவியிலிருந்து விலகிய காரணத்தினால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பீடம் ஒரு இளைஞருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவ் ஒப்பந்தத்திற்கு அமைய இவர் கட்சியினால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய அமர்வின் போது மொத்தம் 24 உறுப்பினர்களில் பொது ஜன பெரமுன கட்சியின் 04 உறுப்பினர்களில் 03 பேர் சபைக்கு சமூகம் தரவில்லை. சபைக்கு சமூகம் தந்திருந்த 21 உறுப்பினர்களில் கேடயம் சின்னத்தின் சுயேட்சைக்குழு 02 உறுப்பினர்களும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் 2 உறுப்பினர்களும் தமிழர் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டனியின் ஒரு உறுப்பினருமாக 06 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எனினும் 15 உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் காளிராஜா கோகுல்ராஜ் திருகோணமலை நகர சபையின் உப தலைவராக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டார்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
No comments:
Post a Comment