இந்தியப்பாடகி கனிகா கபூர் தான் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை ஜனாதிபதி மாளிகை முதல் நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. பாடகி கனிகா கலந்துகொண்ட விருந்துபசார நிகழ்வே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தனது நிகழ்வுகளை இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார். இதேவேளை பாடகியின் நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி சந்தித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசுந்தரா ராஜேயும் அவரது மகனும் தங்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
நான் லக்னோவில் இருந்தவேளை அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டேன், துரதிஸ்டவசமாக வைரசினால் பாதிக்கப்பட்ட கனிகாவும் அதில் கலந்துகொண்டுள்ளார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் மகனும் எங்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளோம் என அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதேபோன்று உத்தர பிரதேச சுகாதார அமைச்சரும் தன்னை தனிமைப்படுத்தலிற்கு உட்டுபடுத்துவதாக அறிவித்துள்ளார். இதேவேளை வசுந்தரா ராஜேயின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துசியந் சிங் இந்திய குடியரசு தலைவரை சந்தித்துள்ளார்.
குடியரசு தலைவரின் நிகழ்வில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் தன்மை தனிமைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் கனிகாவின் நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரிற்கு அருகில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அனைவரையும பாதிப்பிற்குள்ளாக்குகின்றது, பிரதமர் அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுள்ளார் ஆனால் நாடாளுமன்றம் இயங்குகின்றது என அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை லண்டனில் இருந்து திரும்பிய பாடகி தனது நோயை மறைத்தார் என என்டிரீவி செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment