சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடக்குமாறும், பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடக்குமாறும், பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

(எம்.ஆர்.எம். வஸீம்)

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்ளுமாறும், ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரசாரக்குழு செயலாளர் அஷ்ஷைக் அப்துல் முக்ஸித் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். 

அந்த வகையில் இலங்கை அரசாங்கமும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை விடுவித்துக் கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வழிகாட்டல்களை நாம் அனைவரும் பேணி நடப்பது கட்டாயமாகும். 

குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் நலன்களுக்காவே என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம் அச்சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். 

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது நாம் வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

இந்த வைரஸின் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டல்களை நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்கள் பேணும் அதேநேரம் ஊரடங்கு சட்டங்கள் தளர்த்தப்படுகின்ற போது நாம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி முன்மாதிரிமிக்க சமூகமாக திகழ வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்பாக வேண்டிக் கொள்கிறது. 

மேலும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் கடைபிடிப்பதுடன் ஏனையவர்களுக்கும் இது விடயமாக விழிப்புணர்வூட்டுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கிறது. 

குறிப்பாக மஸ்ஜித் நிருவாகிகள் இவ்வறிவித்தலை பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியை பாவித்து மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வூட்டுமாறு அனைத்து பள்ளிவாசல் நிருவாகிகளிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment