இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்கு முறை தொடர்கின்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொது அமைப்புக்களிற்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய போது, ஊடகவியலார்கள் மீதான கடத்தல்களும், கைதுகளும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய மனைவியும் தற்போது அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த யுத்த காலத்திலும் கூட 35 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செயயப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
கடந்த நான்கரை வருட காலமாக நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்திலும் கூட கடந்த அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் விசாரணைகள் நடைபெறவில்லை.
ஆகவே இந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கூட அவர்களிற்கான நீதியை பெற்றுக் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் அதேநிலைமைதான் நீடித்துக் கொண்டு இருக்கிறது.
ஆகவே அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர்களை சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்த போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான கைதுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது.
ஆகவே ஊடகவியாலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment