வைத்திய மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

வைத்திய மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

டெல்லியில் நிர்பயா என்ற துணை வைத்திய மாணவி பஸ்ஸொன்றுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர். 

இன்று மார்ச் மாதம் 20 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு குறித்த நான்கு குற்றவாளிகளும் தூக்கிடப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவின் டில்லியில் நிர்பயா என்ற துணை வைத்திய மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு பயணித்த பஸ்ஸில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

பின்னர் அந்த தீர்ப்பை டில்லி உயர் நீதிமன்றமும், சுப்ரீம் நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன. இந்நிலையில், மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு கோரி குற்றவாளிகள் 4 பேரும் ஒவ்வொருவராக மறு ஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், டில்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா கடந்த 5 ஆம் திகதி, குற்றவாளிகள் 4 பேரையும் 20 ஆம் திகதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய மரண தண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். 

இந்த மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, நால்வர் தரப்பிலும் நீதிமன்றில மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார். 

இதேவேளை, குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில் நேற்று (19.03.2020) அன்று நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர். 

நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதி வாய்ப்பாக முறையீடு செய்தார்கள். 

குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2 ஆவது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. 

தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டில்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார். இதனால், வெள்ளிக்கிழமை காலை திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சூழலில் மீண்டும் இறுதி வாய்ப்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்த விதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை. இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர். 

இதேவேளை, பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார். 

மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். 

இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தனித்தனியே அவர்களுக்கான தூக்கு மேடையில் இன்று காலை 5.30 மணிக்கு டில்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment