அரச நிதி தொடர்பில் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

அரச நிதி தொடர்பில் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்

(இராஜதுரை ஹஷான்) 

நிதி நிலவரம், தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அவசியமாகும். அரச நிதி தொடர்பில் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார். 

அரச நிறுவனங்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் வினைத்திறனான செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் அரச சேவையினை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் வரவேற்புக்குரியன. அரச நிதி வீண்விரயமாவதை தவிர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்கு பற்றிய குழு உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
கடந்த நான்கரை வருட காலத்தில் பாராளுமன்றத்தில் பல அடிப்படை விடயங்களை அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தில் 45 சதவீதமான தேசிய நிதி மோசடி செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்தினால் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

தகவல் அறியும் சட்டம் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றிக் கொண்டமை பாரிய வெற்றியாகும். தகவலறியும் சட்டமூலத்திற்கான முயற்சிகள் 2003 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட ஒரு சில தடைகளினால் இந்த நோக்கம் தடைப்பட்டன. 

அதிகளவான அரச சேவைகளை கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அரச ஊழியர்கள் செயற்படுகின்றார்கள். ஒரு வருடத்தில் 180 நாட்களில் முன்னெடுக்கப்படும் மக்களுக்கான சேவை வினைத்திறனாக காணப்பட வேண்டும். 
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஜனநாயக கொள்கையினை முன்னிலைப்படுத்தி அனைத்து தரப்பினரும் செய்படுவதற்கான வழிமுறைகளும் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் போது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கினார். 

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் 2015 ஆம் ஆண்டு அனைத்து தரப்பினரது ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டன. பல விடயங்களை கேள்விக்குற்படுத்தி ஒரு தரப்பினர் முன்னெடுப்பது கவலைக்குரியது. சர்வதே நாடுகளின் பாராளுமன்றங்களின் நல்லுறவினையும் பேணியுள்ளோம். இதனை அடுத்த பாராளுமன்றமும் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும். 

கோப் குழு, அரசாங்க கணக்கு பற்றிய குழு மற்றும் தெரிவு குழுக்களை ஒவ்வொரு மாதமும் 2 முறை கூடுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளேன். துரிதமாக செயற்பட்டால் மாத்திரமே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். என்றார்.

No comments:

Post a Comment