சாய்ந்தமருது நகர சபை வர்த்தமாணி அறிவித்தல் திடீரென ரத்து செய்யப்பட்டமை சாய்ந்தமருது மக்களின் பக்கம் இருந்து பார்க்கும் போது கவலையான விடயம்தான். ஆனாலும் பொதுவாக இது விடயத்தில் சில நலவுகளும் ஏற்பட்டுள்ளது என்பதை முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்க்கும் போது தெரிந்துகொள்ளலாம் என உலமா கட்சித் தலைவர் அஷ்ஷெய்க். முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமாணி அறிவித்தல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சாய்ந்தமருதுக்கு சபை கொடுப்பதில் கல்முனை முஸ்லிம்களுக்கு பெரும் எதிர்ப்பு இல்லாவிட்டாலும் அவ்வாறு கொடுத்தால் கருணா மற்றும் கோடீஸ்வரனின் முயற்சியால் கல்முனை பறி போகும் என்ற அச்சம் நிறைய இருந்தது என்பதை நியாயமாக புரிந்து கொள்ளலாம்.
இதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த மடத்தனங்களும் காரணமாகும். கல்முனை உப பிரதேச செயலகம் என்ற பெயரில் கடற்கரை பள்ளி தொடக்கம் 99 வீதம் முஸ்லிம்களின் சொந்த வர்த்தக நிலையங்கள் உள்ள கல்முனை பஸார், சந்தை என்பனவற்றையும் உள்ளடக்கி தமிழர்களுக்கான உப பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தரமுயர்த்தினால் முஸ்லிம்களின் கல்முனை பறி போகும்.
இந்த எல்லைகள் இருக்கத்தக்க நிலையில் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால் அதனை தனி நகர சபையாக்கி தமிழர் கட்டுப்பாட்டில் மிக இலகுவாக கொண்டு வர முடியும்.
இந்த அச்சம் நியாயமானது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் கடந்த அரசாங்கம் கல்முனை உப பிரதேச செயலகத்தை ரத்து செய்திருந்தால் இந்த அச்சம் ஒழிந்திருக்கும்.
தற்போதைய அரசாங்கம் அறிவித்திருப்பதன் படி இனி கல்முனை தமிழர்களுக்கு சபை அல்லது உப பிரதேச செயலகத்தை தனியான செயலகமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது.
அனைத்து புதிய பிரதேச சபைகளையும் ஒரே நேரத்திலேயே அறிவிக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை மிகச்சிறந்த நடவடிக்கையாகும்.
குறிப்பாக கல்முனை தொகுதி முஸ்லிம்களுக்கு நிம்மதி தரும் விடயமாகும். இவ்வாறு ஒரே நாளில் சபைகள் அறிவிக்கப்படும் போது நிச்சயம் சாய்ந்தமருதுக்கும் சபை கிடைக்கும்.
ஆனாலும் இந்த கால எல்லைக்குள் கல்முனை முஸ்லிம்கள் மிக கவனமாக காய் நகர்த்த வேண்டும்.
உடனடியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து கல்முனை செயலகம் என்பது ஸாஹிரா முதல் தாளவெட்டுவான், மருதமுனை, நற்பிட்டிமுனை என்பதை எழுத்து ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனை ஜனாதிபதி வரை கொண்டு செல்லும் ஆற்றல் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் அதாவுல்லாவுக்கும் உண்டு. இவர்களை கல்முனை அரசியல் ரீதியாக அணுகி பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment