(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.
இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமைக்கமைய, இன்றைய தினம் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமையால் மீண்டும் நாளைமறுதினம் செயற்குழு கூடவுள்ளது. இந்நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில் நாளைமறுதினம் மீண்டும் செயற்குழுவை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment