மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும் அதனை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும் அதனை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் இன்று (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று எமது தரப்பு ஆட்சியமைத்திருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையிலுள்ள நிதியை பயன்படுத்தியே நிர்வாகம் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆட்சியின் போது வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர்கள், உரம் வழங்கியவர்கள் என பல தரப்புகளுக்கும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.

இவற்றை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே மேலதிக நிதி கோரி இடைக்கால கணக்கறிக்கையொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அதனை தோற்கடித்து குறுகிய அரசியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அவரது கட்சி உறுப்பினர்களும் முயற்சித்தனர். இதனால், நிதி அறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றது.

அரசாங்கம் இவ்வாறு மீளப்பெற்றமை தங்களுக்கு கிடைத்த வெற்றியென அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியானது மென்மேலும் பிளவடைந்து வருவதை காணமுடிகின்றது.

அதேவேளை, இந்த நாட்டில் சமூகம், பொருளாதாரம், கலாசாரம், தனித்துவம் என அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் சீரழிக்கப்பட்டன. 

இதன் காரணமாகவே கட்சி, நிறம் ஆகியவற்றை மறந்து, தமக்கென தாய் நாடும், தேசிய அடையாளங்களும் வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலின்போது ஓரணியில் திரண்டீர்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அமோக ஆதரவை வழங்கினீர்கள்.

நாட்டுக்காக சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி முற்பட்டாலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததால் தேவையான சட்டமூலங்களை சமர்ப்பிக்க முடியாதுள்ளது.

எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டு வருகின்றது.

உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதி தேர்தல்போல் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் அமோக ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. " - என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment