மலையகத்தில் தரமான முறையில் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவையும் தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவிக்கையில் ´மலையகத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக வீட்டுப் பயனாளிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
52 நாட்கள் அரசாங்கத்தின்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களானவை தரமானவையாக இல்லை என்றும், உரிய கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றி நிர்மாணிக்கப்படவில்லை என்றும் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதன்படி பெருந்தோட்ட மனித வள நிதியத்திலுள்ள பொறியியலாளர்களும், சிவில் பாதுகாப்பு படையணியின் பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் திட்டங்களை முன்னெடுப்பார்கள். இதன்மூலம் தரம் என்பது ஒன்றுக்கு இரு தடவைகள் உறுதிப்படுத்தப்படும்.
ஹட்டன் வெஸ்டன் டிவிசனில் மண்வரிசால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்கள் இருக்கின்றன. அக்குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் எமது புதிய அணுகுமுறையின் கீழ் விரைவில் முன்னெடுக்கப்படும்.´ என்று கூறினார்.
மலையக நிருபர் கிரிஷாந்தன்
No comments:
Post a Comment