நேரம் என்பது எமது வாழ்வில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால் நேரம் பொன் போன்றது எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் நேரமானது வாழ்க்கையாகும். அதாவது வாழ்க்கை நேரத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஒரு மனிதன் காலை எழும்புவதிலிருந்து இரவு தூக்கத்திற்கு செல்லும்வரை அனைத்து செயற்பாடுகளிலும் நேரம் செல்வாக்கு செலுத்துகிறது.
நேரத்தின் பெறுமதியை எம்மால் மதிப்பிட முடியாது. அதுபோன்று நிறுத்தி வைக்கவோ திருப்பிப்பெறவோ முடியாது. நேரம் இழந்தது இழந்ததாகவே இருக்கும். மீண்டும் அதனைப் பெறமுடியாது. இதனை அறிஞர் இவ்வாறு கூறுகின்றார், நேரத்தைப்பிடிக்க வேண்டுமெனில் அது உன்னை எதிர்கொண்டு வரும்போது பிடித்துக்கொள் கடந்தபின் பிடிக்கமுடியாது.
நேரம் என்பது நேர்கோட்டில் இயங்குகின்றது. அது ஒரு போதும் ஆரம்பப்புள்ளியை சந்திக்காது. நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதற்கு சமனாகும். நேரவிரயம் சமூக சீர்கேட்டை விளைவிக்கும். எனவே நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை முகாமைத்துவம் செய்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் தமது இலக்கை அடைவதற்கு நன்கு திட்டமிடல் அவசியம். அத்திட்டமிடலானது நேரத்துடன் பின்னிப்பிணைந்து காணப்படுவதால் நேரத்தை முகாமை செய்யவேண்டிய தேவையுள்ளது.
காலமும் நேரமும் எம்மனிதருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் கழிக்கின்ற ஒவ்வொரு பொழுதும் நொடியும் நிச்சயமாகத் திரும்பி வரப்போவதில்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் காலத்தினதும் நேரத்தினதும் முக்கியத்துவம் பற்றி இவ்வாறு கூறுகின்றான். 'காலத்தின் மீது சத்தியமாக' (103:01). நபி (ஸல்) அவர்களும் நேரத்தை வீணடிக்காது பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
நேர முகாமைத்துவம்
நேர முகாமைத்துவம் என்பது ஒரு விடயத்தை செய்வதற்குத் திட்டமிடப்பட்ட செயற்றிட்டமாகும். இன்று நாம் வாழும் தொழிநுட்ப உலகில் நேரம் விரைவாக சென்று கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்கள் நேரங்களை செலவிடுவதில் கவனயீனமாகவும் தடுமாறியும் கொண்டிருக்கிறார்கள்.
இன்று மனிதன் எதற்கெடுத்தாலும் தனக்கு நேரமில்லை அல்லது நேரம் போதாது என்கின்றான். நேரத்தைக் காட்டிலும் அவனது வேலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறு கூறக்காரணம் நேரத்தை திட்டமிட்டு அதனை முகாமைத்துவம் செய்து இயங்காததன் விளைவாகும்.
நேரம் உண்மையில் பெறுமதிமிக்கது விலைமதிக்க முடியாது. பத்தரை மாற்று பசும் பொன் கூட மனிதனின் ஆயுளில் ஒரு வினாடிக்கும் சமனாகாது. காலநேரம் அவ்வளவு பெறுமதி வாய்ந்தது. உச்சபயனை அடையும் வரையில் அதனை ஒழுங்காகத் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
பொதுவாக பல்கலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் நேரம் போதாது, ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்யமுடியாது அதற்கு நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறானதாகும். ஒவ்வொருவரும் நேரத்தை ஒழுங்காக முகாமைத்துவம் செய்து செயற்பட்டால் அவனது இலக்கை சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிலர் அவர்களது இலக்கை அடைந்து கொள்வதற்காக ஒழுங்காக நேரத்தை முகாமை செய்து செயற்படுகின்றனர்.
அவர்களைப்பார்த்து ஏனையோர் அவனுக்கு நேரம் அதிகம் அவனது அனைத்து வேலைகளையும் நேரத்துக்கு செய்து விடுகிறான் எனப் பொறாமைப்படுவதுண்டு. அது பொறாமைப்பட வேண்டிய விஷயமல்ல. கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். அவன் அவனது இலக்கை அடைந்துகொள்ள நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை முகாமைத்துவம் செய்து அதன்படி செயற்படுகின்றான்.
பொதுவாக பலர் நேரங்களை வீண்விரயம் செய்கின்றனர். ஓய்வு நேரங்களை தேவையற்ற விடயங்களில் செயற்படுத்துவது. இது தொழிநுட்ப யுகமாகக் காணப்படுவதால் தொழிநுட்ப சாதனங்களில் தமது நேரங்களை செலவுசெய்வதை அவதானிக்க முடிகின்றது.
பொதுவாக, ஒரு பல்கலைக்கழக மாணவனைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு பல கல்விசார்ந்த செயற்பாடுகள் காணப்படுகின்றன. அதுபோன்று தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள சில ஆளுமை செயற்பாடுகளும் உள்ளன. ஆரம்பத்தில் கூத்து, கேளிக்கை விளையாட்டு என்பவற்றில் நேரத்தை செலவு செய்துவிட்டு இறுதியில் தாங்களது கல்வி செயற்பாடுகளை நிறைவேற்ற சிரமப்படுகின்றனர். நேரம் போதாது என்று மனஅழுத்தம் கொள்வதையும் காணமுடிகின்றது. அவ்வாறு ஏற்படாமல் இருக்க நேரத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து செயற்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
ஒரு மாணவன் தனது அன்றாட வேலைகளை பின்வரும் வகைகளில் பிரித்து நேரத்தை எங்கு? எப்போது? எவ்வாறு? என்று திட்டமிட்டு செயட்படுத்த வேண்டும்.
1) முக்கியமான அவசரமான வேலை.
2) முக்கியமான அவசரமற்ற வேலை.
3) முக்கியமற்ற அவசரமான வேலை.
4) முக்கியமற்ற அவசரமற்ற வேலை.
முக்கியமான அவசரமான வேலை எனும்போது வணக்க வழிபாடுகள் அதாவது, தொழுகைக்குரிய நேரம் வந்துவிட்டால் இதை நிறைவேற்றுவது, பசிவந்தால் நேரத்தில் சாப்பிடுவது, பாடத்திற்கு உரியநேரத்தில் செல்வது இவற்றை குறிப்பிடலாம்.
முக்கியமான அவசரமற்ற வேலை எனும்போது, ஒருவன் தன்னை உருவாக்கிக் கொள்ள தன் ஆளுமை அறிவுகளை வளர்த்துக் கொள்ளல், தன் தொழிலுக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளல். இவைகள் முக்கியமான வேலைகள். ஆனால் அவசரமில்லாதவை. ஆனால் கட்டாயம் ஒரு மனிதன் இதற்குரிய நேரங்களை ஒதுக்கவேண்டும்.
முக்கியமற்ற அவசரமான வேலை எனும்போது திடீரென வரும் தொலைபேசி அழைப்புக்கள், திடீரென சந்திக்க வருபவர்கள் இவைகள் அவசரமானவைகள்தான். ஆனால் நமக்கு முக்கியமற்றவைகளாக இருக்கலாம். இதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது. நீங்கள் முக்கியமான அவசரமான வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது இவைகள் வந்தால் இவைகளுக்காக வேறொரு நேரத்தை ஒதுக்கலாம்.
முக்கியமற்ற, அவசரமற்ற வேலை எனும்போது நீர் அருந்த சென்று தேவையில்லாமல் பேசிக்கொண்டு நேரம் பிந்தி வரல். இவைகளுக்காகவே அதிகமான நேரங்களை செலவிடுகிறோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் நேரம் வீண்விரயம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட முறையில் நேரங்களை திட்டமிட்டு செயற்படுவதன் மூலம் எம் அனைத்து செயற்பாடுகளையும் வெற்றியின் பக்கம் திசை திருப்பமுடியும்.
ஒருவர் தூங்கி எழும்பியதும் அல்லாஹ்வுக்குரிய கடமைகளை சரிவர செய்து விடவேண்டும். பிறகு கொஞ்சநேரம் இறைசிந்தனையில் இருக்கலாம். அன்று செய்யும் வேலைகளை எழுதிவைத்து அவற்றுக்கேற்றாற் போல் செயற்படலாம். ஓய்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வேறுவிடயங்களில் சிறிது கவனம் செலுத்தலாம். செய்திகளை பார்ப்பது அல்லது புத்தகங்களை வாசிப்பது போன்ற விடயங்களில் ஈடுபடலாம்.
நாம் ஒரு வேலையை செய்யும்போது இடையில் சிறிது ஓய்வு எடுப்பது அவசியம். காரணம் மனித உள்ளம் தொடர்ந்து ஒரு வேலையில் ஈடுபட்டால் மன அழுத்தங்களுக்கு உள்ளாவதை நாம் அறிவோம். மன அழுத்தங்கள் ஏற்பட்டால் எமது வேலைகள் பாதிப்படையும். ஆகவே தேவையான சந்தர்ப்பங்களில் ஓய்வை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது நவீன காலம் என்பதால் முக்கியமாக Smart Phone மற்றும் Internet பாவனைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். இன்று அதற்கு அடிமையாக இருக்கின்றோம். நாள் பூராகவும் தூக்கமில்லாமல் இதிலேயே மூழ்கியிருக்கின்றோம். குறிப்பிட்ட நேரங்களை அதற்காக ஒதுக்கி வைத்துக்கொண்டால் மிகச்சிறப்பு அந்த நேரத்தை தவிர வேறு நேரங்களில் அதனுள் நுழையாமல் இருத்தல்.
நேர முகாமைத்துவத்தில் இஸ்லாம் வெகு கண்டிப்பாக உள்ளது. நேர முகாமைத்துவத்தில் நபி (ஸல்) அவர்களை விட வேறொருவர் எமக்கு முன்மாதிரியாகத் தேவையில்லை எனத் துணிந்து கூறும் அளவுக்கு அவர்கள் சொல்லாலும் செயலாலும் நேர முகாமைத்துவத்தை செய்து காட்டியுள்ளார்கள்.
நேரமுகாமைத்துவம் என்பது வினைத்திறன், செயற்றிறன் அல்லது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டை செய்து முடிப்பதற்கு செலவிடப்படும் நேரத்தினை திட்டமிட்டு கட்டுப்படுத்தும் செயன்முறை அல்லது கலை எனக்கூறலாம்.
சிறந்த நேரமுகாமைத்துவத்தை பேணுவதற்கான சில வழி முறைகள்:
01) செய்ய வேண்டியதை எழுதி வைத்தல்.
02) எழுதியவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிரற்படுத்தல்.
03) வாராந்த திட்டத்தை வகுத்தல்.
04) தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு சரியாக நேரத்தை ஒதுக்குதல்.
05) நாளாந்த செயற்பாடுகளில் எதனை கைவிடுவது என சிந்தித்தல்.
06) நேரத்தை வீணாக்குதல், தீயபழக்கங்களை அடையாளம் காணல்.
07) நாளாந்த கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றல்.
08) நன்கு திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தல்.
09) ஒதுக்கப்பட்ட காலத்துக்குள்ளே வேலையை செய்து முடிக்க முயற்சித்தல்.
10) தேவையற்ற உரையாடல்களை தவிர்த்தல்.
11) நேரத்தை முகாமைத்துவம் செய்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் நேரமின்மை என்ற விமர்சனம் ஓய்வடையும். ஒழுங்காக எமது இலக்கை அடைந்து கொள்ளலாம்.
நேரத்தின் பெறுமதி
காலையில் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு 100,000 ரூபாய் வைப்பிடப்படுகின்றது என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அடுத்த நாள் மிகுதி எதுவும் இல்லாமல் போகிறது. ஒவ்வொரு நாள் மாலையும் நீங்கள் பயன்படுத்தாமல் விட்ட பணம் நீக்கப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? கட்டாயம் ஒவ்வொரு சதத்தையும் பயன்படுத்த முயற்சிப்பீர்கள். அதுபோல் தான் நாம் ஒவ்வொருவரும் நேரம் எனும் வங்கியைக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அதற்கு 86400 வினாடிகள் வைப்பிலிடப்படுகின்றன. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவை நீக்கப்படுகின்றன.
முன்னைய நாளிலிருந்த எந்த வினாடியும் அடுத்த நாளுக்குகொண்டு செல்லப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் புதிய வினாடிகள் வைப்பிலிடப்பட்டு அந்நாளின் முடிவில் நீக்கப்படும். அவை அப்படியே நீங்கி விடுகின்றன. அதை நாம் இழந்து விடுகின்றோம். நேரம் ஒடிக்கொண்டே இருக்கிறது. ஆகவே அதனை பெருமளவு பயனுள்ள வழிகளிலே அதனை செலவு செய்ய வேண்டும்.
நேரத்தின் பெறுமதியை பின்வரும் சந்தர்ப்பங்களை சந்தித்தவர்களிடம் கேட்கலாம்.
1) ஒரு வருடத்தின் பெறுமதியை பரீட்சைக்கு தோற்றிய மாணவனிடம் கேட்கலாம்.
2) ஒரு மாதத்தின் பெறுமதியை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் கேட்கலாம்.
3) ஒரு நிமிடத்தின் பெறுமதியை பஸ்வண்டியைத் தவறவிட்டவனிடம் கேட்கலாம்.
4) ஒரு செக்கனின் பெறுமதியை விபத்தில் தப்பியவனிடம் கேட்கலாம்.
5) நுண்ணொடியின் பெறுமதியை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டவனிடம் கேட்கலாம்.
அதனால் நாம் எமது ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளதாக அதன் பெறுமதியை உணர்ந்து நடக்க வேண்டும்.
நேரத்தின் பெறுமதியை உணர்ந்து அதனை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். அதனை வீணடிக்கக்கூடாது என்பதையெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலத்தின் மீது அல்லாஹ்தஆலா சத்தியமிட்டுக் கூறுகின்றான். காலத்தின் மீது சத்தியமாக (103:01), இரவின் மீது சத்தியமாக அது மூடிக்கொள்ளும்போது பகலின் மீது சத்தியமாக அது வெளியாகிய போது (92:01-02,) முற்பகல் மீது சத்தியமாக (93:01) என புனித அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
காலத்தை சரிவர முகாமைத்துவம் செய்வது தனிமனிதனின் பொறுப்பாகும். அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்படும். ஒவ்வொருவரும் தனது ஆயுட்காலத்தை கழித்தமுறைபற்றி அல்லாஹ்விடம் சரியாக கணக்குக் காட்ட வேண்டும். மனிதவாழ்வு மிக மிகக் குறைவானது. இக்குறுகிய வாழ்நாளுக்காகத்தான் மனிதன் மறுமைக்காக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்துக்குமிடையில் இவ்வுலக தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
உமது ஆயுள் எண்ணப்படக்கூடிய சில மூச்சுகள், உம்மிலிருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்துவிடும் என ஒரு அரேபிய கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நமதுவேலைகளை திட்டமிட்டுக் கொண்டு செயற்படவேண்டும்.
ஒவ்வொருவரும் தனது பொன்னான நேரத்தை வீணடிக்காது. அதனை பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும். நிறைவேற்ற வேண்டிய நிறைய விடயங்களை அப்படியே வைத்துவிட்டு ஏதேதோ உருப்படியற்ற விடயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்த பின் இதற்கு நேரமில்லை அதற்கு நேரமில்லை எனக்கூறுவதில் அர்த்தமில்லை.
ஒவ்வொருவருக்கும் நேரமானது அளித்துள்ள ஓர் அமானிதம். அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவரவர் கையிலுள்ளது. இதன் மூலமே நேர அமானிதம் பேணப்படுகின்றது. நேரமுகாமைத்துவம் செய்யாதவர் மொத்தத்தில் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தாதவர்.
எனவே, நேரமுகாமைத்துவம் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? பெறுமதி என்ன? அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும், என்று இக்கட்டுரை மூலம் தெளிவு ஏற்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இதன் பெறுமதியை உணர்ந்தால் நேரமில்லை என்ற ஒரு சப்தத்தை கேட்கமுடியாது. எனவே நேரம் வாழ்க்கையாகும். அதனை மனதில் நிறுத்தி நேரத்தை வீணடிக்காது பயனுள்ளமுறையில் அதனை முகாமைத்துவம் செய்து எமது இலக்கினை அடைந்து கொள்வோம்.
பீ.எப்.ருக் ஷானா
மூன்றாம் வருடம்
தென் கிழக்கு பல்கலைக்கழகம்
Vidivelli
No comments:
Post a Comment