‘டிக் டோக்’ குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக, மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.
ஆகையால், தங்களின் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும்போது, பெற்றோர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென அவர் வலியுத்தியுள்ளார்.
டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் 20 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாம் காண்கிறோம். இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர்.
டிக் டோக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயற்படுவது முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
இந்த குழுக்கள், சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.
டிக் டோக் குழுக்கள் மூலம், அதிகமான குற்றவாளிகள் சிறுவர்களின் வீடுகளுக்குள் நுழைகின்றனர். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.
சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும்போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும். மேலும், சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம்.
தனியாக இருக்கும்போது, அவர்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் டிக் டோக் குழுக்களில் சேர்ந்து கடுமையான குற்றங்களுக்குள்ளாகலாம். எனவே, உங்களின் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை எவ்வாறஞ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment