கோட்டாபய நழுவ முடியாது, பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும் : நமலிடம் திட்டவட்டமாக தெரிவித்த உலமா சபை : காஸா விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் எனவும் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

கோட்டாபய நழுவ முடியாது, பொதுஜன பெரமுன தரப்பு பொறுப்பு கூற வேண்டும் : நமலிடம் திட்டவட்டமாக தெரிவித்த உலமா சபை : காஸா விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் எனவும் கேள்வி

பல­வந்­த­ ஜனாஸா எரிப்பு விட­யத்தில் பொறுப்புக் கூறு­வ­தி­லி­ருந்து முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச நழுவி விட முடி­யாது என சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, இந்த அநி­யா­யத்­திற்கு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் பொறுப்பு கூற வேண்டும் என நாமல் ராஜ­பக்­ச­விடம் திட்­ட­வட்­ட­மாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தவி­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச மற்றும் அக்­கட்­சியின் ஹம்பந்தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் டீ.வீ. சானக உள்­ளிட்ட கட்சிப் பிர­மு­கர்கள் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தலை­மை­ய­கத்­திற்கு நேற்­று­முன்­தினம் சென்றிருந்தனர். இதன்­போது, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமாவின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­க­ளுடன் மேற்­கொண்ட சந்­திப்­பின்­போது இவ்­வி­டயம் சுட்டிக்­காட்­டப்­பட்­டது.

கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன­வினர் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு அமைய நேற்றுமுன்தினம் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில், உலமா சபை­யி­னரை சந்­திப்­ப­தற்கு நேரம் ஒதுக்கப்பட்­ட­மைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச நன்­றியை தெரி­வித்­த­துடன், இலங்கை முஸ்­லிம்­க­ளு­ட­னான உறவுகளை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன முஸ்­லிம்கள் விட­யத்தில் அக்­க­றை­யுடன் இருப்­பதை வெளிப்படுத்தவும் உலமா சபை­யுடன் சந்­திப்­ப­தற்­கான கோரிக்கை விடுத்த நோக்­கத்தை தெளிவுபடுத்­தினார்.

வருகை தந்­தி­ருந்த பிர­மு­கர்­களை வர­வேற்று உரை­யாற்­றிய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் முதலில் சபை­யி­லி­ருந்த நிறைவேற்றுக் குழு உறுப்­பி­னர்கள் பற்­றிய அறி­மு­கத்தை வழங்கியதுடன் நாட­ளா­விய ரீதி­யி­லான ஜம்­இய்­யாவின் செயற்பாடுகள் தொடர்­பிலும் தெளி­வு­ப­டுத்­தினார்.

மேலும், யுத்தம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் இலங்கை முஸ்­லிம்கள் விட­யத்தில் வித்­தி­யா­ச­மான போக்­கு­களை காண­மு­டிந்­த­தா­கவும் இது விட­யத்தில் ராஜ­பக்­சா­வினர் மெத்­த­னப்­போக்­குடன் செயற்பட்டதாகவும் தெரி­வித்தார்.

இலங்கை மீது யுத்தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு சர்­வ­தேச அழுத்­தங்கள் மேலோங்­கி­ய­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் கோரிக்­கைக்கு அமை­வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்­கைக்கு ஆத­ரவு திரட்­டு­வ­தற்கு ஜெனீவா வரை சென்றதை ஞாப­க­மூட்­டிய உலமா சபை செய­லாளர், இதன் கார­ண­மாக உலமா சபை மீது தொடர்ந்தும் குற்­றச்­சாட்­டுகள் முன்வைக்­கப்­பட்டு வரு­கின்­றது என்றார்.

இவ்­வாறு தேசத்­திற்­காக நாமும் முஸ்லிம் சமூ­கமும் ஒன்­று­பட்டு செயற்­பட்­ட­போதும், யுத்­தத்­திற்கு பின்னர் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர்.

கிறீஸ் மனிதன் விவ­காரம், பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்கள், அளுத்­கம வன்­மு­றைகள் மற்றும் முஸ்லிம் வெறுப்பு பிர­சாரம் திட்­ட­மி­டப்­பட்டு தங்­க­ளது ஆட்­சி­யின்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதற்கு எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வி­ட­யங்­க­ளின்­போது, குற்­ற­வா­ளி­களை கண்­டு­பி­டித்து தண்­டனை வழங்­கு­வதில் தவறு விடப்­பட்­டது. இவ்­வா­றுதான் ராஜ­பக்ச அர­சாங்­கங்கள் செயற்­பட்­டன. இத­னா­லேயே, பொது­ஜ­ன­பெ­ர­முன மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இவ்­வி­ட­யங்கள் குறித்து மீள் பரி­சீ­லனை செய்து தவ­று­களை திருத்திக்­கொண்டு முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும் என உலமா சபை செய­லாளர் தெரி­வித்தார்.

அத்­துடன், பலஸ்­தீன விட­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்­சவின் நிலைப்­பாட்டை பாராட்­டிய உலமா சபை செய­லாளர், ரமல்­லாவில் வீதி­யொன்­றிற்கு மஹிந்த ராஜ­பக்­சவின் பெயர் சூட்டப்பட்­டுள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டினார். 

இந்­நி­லையில், தற்­போது காஸாவில் இடம்­பெற்­று­ வரும் அநியாயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கண்டுகொள்­ளா­தி­ருப்­ப­தா­கவும், பலஸ்­தீன விவ­கா­ரத்தில் இன்று மௌனம் காப்­பது ஏன் என்றும் கேள்வி எழுப்­பினார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச, தனது அர­சியல் கொள்­கைகள், கட்சி நிலைப்பாடுகள் மற்றும் எதிர்­கால திட்­டங்கள் பற்றி விளக்­கி­ய­துடன், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் இருந்த இணக்கம் மற்றும் அவர் ஆற்­றிய சேவை­க­ளையும் சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மேற்­கொள்ளும் சகவாழ்வுத் திட்­டத்­தி­னையும் சக­வாழ்வு மையங்­க­ளையும் பாராட்டி, இன, மத, மொழி வேறு­பா­டுகள் இல்­லாத சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தினார்.

இந்­நி­லையில், பலஸ்­தீன விவ­கா­ரத்தில் மௌனம் காப்­பது குறித்து உலமா சபை செய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

இந்­நி­லையில், அதனை அடுத்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கருத்­து­களை முன்­வைத்தார்.

அவர், ஜம்­இய்யா ஓர் அர­சியல் சார்­பற்ற நிறு­வனம் எனவும் சகவாழ்வு, ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்தி பிற மதஸ்­த­லங்­க­ளுக்கு எமது அமைப்­பினர் பல கள விஜ­யங்­களை மேற்கொண்­டி­ருப்­ப­தனை சுட்­டிக்­காட்­டினார்.

மேலும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தனது ஆட்சிக் காலத்தில் நாட்­டிற்கு ஆற்­றிய சேவை­க­ளையும் இலங்­கையில் நிலவிய கொடிய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­த­தையும் நினைவு கூர்ந்தார்.

என்­றாலும் பிற்­பட்ட காலங்­களில் ஆட்­சிக்கு வந்­த­வர்­களால் இந்த நாட்டு முஸ்­லிம்கள் பல்­வேறு வித­மான அநீ­தி­க­ளுக்கு உள்ளாக்கப்பட்­டார்கள். அவற்றில் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் உத்­தி­யோ­க­பூர்வ வழி­காட்­டல்­களை புறக்­க­ணித்து, ஜனாஸா எரிப்பு விட­யத்தில் ஜம்­இய்யா அரச தரப்­புடன் பல சந்­திப்­புக்­களை நடாத்தியும் முஸ்­லிம்­க­ளது உள்­ளங்கள் பாதிப்­புறும் வகையில் கொவிட் ஜனா­ஸாக்­களை எரித்­தமை, ஹலால் சான்­றி­த­ழுக்கு தடை விதித்­தமை, முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்தம், முஸ்லிம்க­ளுக்­கெ­தி­ரான திட்­ட­மிட்ட கல­வ­ரங்­களை தடுக்­காமை, இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­வர்­களை கண்­டிக்­காமல் உயர் பத­விகள் வழங்கி கௌர­வித்­தமை போன்ற விட­யங்­களை சுட்டிக் காட்டியதுடன் உரி­ய­வர்கள் உலக முஸ்­லிம்­க­ளி­டத்தில் இவற்­றிற்­காக மன்­னிப்பு கோர முன் வர­வேண்டும்.

இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கிய தாங்கள் இவற்­றி­லி­ருந்து தகுந்த பாடங்­களை கற்று முஸ்­லிம்­க­ளது உள்­ளங்கள் சாந்­தப்­படும் வகையில் இன, மதம் பாராது அர­சி­யலில் ஈடு­ப­ட­வேண்டும் எனவும் எடுத்­து­ரைத்தார்.

அத்­தோடு இஸ்­லாத்தில் நிர்ப்­பந்தம் இல்லை, பிற மத கட­வுள்­களை விமர்­சிப்­பது கூடாது, அவ­ர­வ­ருக்கு அவ­ரவர் மார்க்கம் என்ற இஸ்லாமிய கோட்­பா­டு­களை அல்-­குர்ஆன் ஆதா­ரங்­க­ளோடு சுட்டிக்காட்­டிய ரிஸ்வி முப்தி ஜம்­இய்யா அதற்­காக மேற்கொண்டுவரும் முயற்­சிகள் தொடர்­பிலும் விளக்­க­ம­ளித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த பொது­ஜன பெர­முன தரப்­பினர், ஜனாஸா எரிப்பு அர­சாங்கம் முன்­னெ­டுத்த விடயம் அல்ல, அது கொவிட் செயலணியின் தீர்­மானம் என குறிப்­பிட்டனர். எனினும், இதற்கு பதில­ளித்து பேசிய உலமா சபை செய­லாளர் கோவிட் ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விட­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்­சதான் முழு­மை­யான பொறுப்பு. அவர் பத­வியில் இருக்­கும்­போதே ஜனாஸா எரிப்­ப­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. செய­லணி மீது விட­யத்தை சுமத்தி தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்தான் இவ்விடயத்திற்கு முழுமையான பொறுப்பு கூற வேண்டிய நபராக உள்ளார். அவர் ஒருபோதும் பொறுப்பு கூறலில் இருந்து நழுவிவிட முடியாது. அத்துடன், ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றர் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment