மீனவர்கள் தீவிரவாதிகளைப்போன்று நடாத்தப்படுகின்றனர் : கடற்படையினருக்கு அதிகாரம் வழங்கியது யார்? - இம்ரான் MP - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

மீனவர்கள் தீவிரவாதிகளைப்போன்று நடாத்தப்படுகின்றனர் : கடற்படையினருக்கு அதிகாரம் வழங்கியது யார்? - இம்ரான் MP

மீனவர்கள் தீவிரவாதிகளைப்போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

குச்சவெளியில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதிப்பத்திரம் பெற்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இன்று கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.

சுருக்கு வலை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன். இதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு மூல காரணம்.

ஹஜ்ஜு பெருநாள் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள்போல் சோதனை இட்டு அவர்களை மிரட்டுவதும் பயமுறுத்துவதுமாக இருந்த சம்பவம் இன்று துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளது. மீனவர்கள் தீவிரவாதிகளைப் போன்றே இங்கு நடத்தப்படுகின்றனர்.

மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கடற்படையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது? இச்சம்பவத்தில் பாதிப்படைந்த மீனவர்களுக்கு நீதி வழங்க நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருகோணமலைக்கு பொருத்தம் இல்லாத சுருக்கு வலை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment