சிறுவர்களிடையே தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

சிறுவர்களிடையே தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம்

(செ.சுபதர்ஷனி)

போசாக்கு மிக்க உணவுகளை தவிர்ப்பதால் நாட்டில் சிறுவர்களிடையே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் போசாக்குப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா விஜேரத்ன தெரிவித்தார்

போசாக்கு மாதத்தை முன்னிட்டு புதன்கிழமை (25) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பலர் தற்போது உலர் உணவு மற்றும் துரித உணவு பொருட்களை கொள்வனவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதிக எண்ணெய், உப்பு, சீனி மற்றும் மா பொருட்களை உட்கொள்வதால் வயோதிபர்கள் மாத்திரமல்லாது சிறுவர்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகியுள்ளது.

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு கடந்த வருடம் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 7 சதவீதமானோர் உடல் எடை அதிகரித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்தோடு 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய சுகாதார ஆய்வில் 3 சதவீதமான சிறுவர்கள் அதிகரித்த உடற்பருமனால் அவதிப்படுவதோடு 12 சதவீதமானோர் உடல் எடை அதிகமானவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சிறுவர்களின் உணவு வேளையை கருத்திற் கொள்ளும் போது 17 சதவீதமானோர் இனிப்பு பானங்களையும் 28 சதவீதமானோர் அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளையும் 28 - 29 வீதமான சிறுவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளையும் 41 சதவீதமான பிள்ளைகள் அதிக சீனி அடங்கிய உணவுகளையும் உட்கொள்வதாக தெரியவந்துள்ளது.

மேற்படி தரவுகளுக்கமைய பாடசாலை மாணவர்களின் உணவுவேளை உரிய தரத்தில் இல்லை என்பது புலனாகிறது. சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய சிறுவர்கள் தொற்றா நோய்களுக்கு ஆளாகக் கூடிய அபாயம் அதிகரித்துள்ளது.

சிறு வயதிலேயே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய் நிலைமைகளுக்கு ஆளாகலாம். போசாக்கு மிக்க உணவுகளை தவிர்ப்பதால் இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment