அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 27, 2025

அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல்

செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்று இல்லை என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பாரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது எனவும், வைத்தியசாலைகளால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உபகரணங்களுக்கு நோயாளிகள் அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூபாய் 350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் செலுத்திய பிறகு, நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் அதே வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான சம்பவத்துடன் வேறுபட்டதல்ல என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ஏழை நோயாளிகளால் அறுவை சிகிச்சைகளுக்கு இவ்வளவு அதிகமான செலவுகளை தாங்கிக் கொள்ளமுடியாது". பல மாதங்களாக போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்காததற்கு மருத்துவ வழங்கல் பிரிவை அவர் குற்றம் சாட்டினார். இது இந்த சட்டவிரோத மோசடிகள் தொடர அனுமதித்ததாக அவர் கூறினார்.

நாட்டின் இலவச சுகாதார முறையை மருந்து நிறுவனங்கள் இதுபோன்று தவறாக பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது.

சுகாதார அமைச்சு தனது பட்ஜெட்டை நிர்வகிக்கவும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் ஏன் தவறிவிட்டது என்பது குறித்து முழுமையான விசாரணையை தொடங்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இறுதியாக, தனிப்பட்ட இலாபத்திற்காக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு வைத்தியர் சஞ்சீவ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment