இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (27) கைது செய்யப்பட்டார்.
விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 2014 ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 22 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்காவிற்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த UL319 விமானத்தின் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் நிதி இழப்பை ஏற்படுத்தியிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
அத்துடன் 2014 ஆம் ஆண்டு 01 ஆம் மாதம் 26 ஆம் திகதி மாலைதீவிலிருந்து வந்து UL563 விமானத்தில் பிரான்சுக்குச் செல்லவிருந்த 75 பயணிகளை இறக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 19,160 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment