உடனடியாக தேசிய பாதுகாப்பு சபையைக் கூட்டுங்கள் : அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

உடனடியாக தேசிய பாதுகாப்பு சபையைக் கூட்டுங்கள் : அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர்

(எம்.மனோசித்ரா)

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் இலங்கைக்கு பல்வேறு வகையிலும் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்காக உடனடியாக தேசிய பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை (23) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படும்போது, மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு துறைகளில் பெரும் பிரச்சினை எழும். ஈரானிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம், ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

ஒட்டு மொத்த சர்வதேச எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் 20-30 சதவீதத்துக்கு இடையிலும், சர்வதேச இயற்கை எரிவாயு விநியோகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்த நீரிணை நீர் வழித்தடம் ஊடாக செல்வதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும் என பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு நாடாக நாம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், பாதுகாப்பு சபையை உடனடியாகக் கூட்டி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். ஹார்முஸ் நீரிணை மூடப்படும் பட்சத்தில் வலுசக்தித் துறையில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்ய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை தற்போது அதிகரித்துள்ளன. நாடாக நாமும் இது குறித்து ஆராய்ந்து இதன்பால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறே மத்திய கிழக்கில் பணி புரியும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து ஆராய்ந்து, அவர்களினது வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு மத்தியில் ஏதேனும் தொழில் இழப்புகள் ஏற்பட்டால், அது நாட்டை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த விடயம் உள்ளிட்ட பன்முக நோக்கிலான முன்னாயத்த ஆராய்வை நடத்துமாறு கோருகின்றோம்.

மேலும், சுற்றுலாத்துறை பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றிலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை நல்கி வரும் தொழிற்துறை, விவசாயம் மற்றும் சேவைகள் துறை உட்பட ஒட்டு மொத்த துறைகளிலும் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை கையாள்வதற்கு ஏற்ற தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண வேண்டும்.

அவசர பொருளாதார வேலைத்திட்டத்தின் தேவை நமக்கு காணப்படுகிறது. இதனை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும். இரு தரப்பு மற்றும் பல்தரப்பு உறவுகளை வளர்த்துக்கொண்டு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து நமது நாடு எதிர்கொள்ள காத்திருக்கும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலைமை நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் மூலோபாய ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, தளர்வான அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும். சார்க் அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் கவனம் செலுத்தி நாம் எதிர்கொள்ளும் சவால்களை உலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment