தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடிவிட்டு விடுவிக்க மறுக்கும் வன இலாகா : சிங்களக் குடியேற்றத்திற்கும், படைத் தளங்கள் அமைக்கவும் ஒதுக்கக் காடுகள் விடுவிப்பு - குற்றஞ்சாட்டியுள்ள ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடிவிட்டு விடுவிக்க மறுக்கும் வன இலாகா : சிங்களக் குடியேற்றத்திற்கும், படைத் தளங்கள் அமைக்கவும் ஒதுக்கக் காடுகள் விடுவிப்பு - குற்றஞ்சாட்டியுள்ள ரவிகரன் எம்.பி

வன வளத் திணைக்களம் தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை அடாவடித்தனமாக அபகரித்துவிட்டு அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பதாகவும், அதேவேளை சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் படைத்தளங்களை அமைப்பதற்காகவும் ஒதுக்கக் காடுகளை வன வளத் திணைக்களம் விடுவிப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக ஏ.சி.பாம் கிராமத்தை வன வளத் திணைக்களம் அபகரித்துவிட்டு விடுவிக்க மறுப்பதை இதன்போது குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வவுனியா வடக்கில் போகஸ்வெவ எனும் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த 2000 ஏக்கர் ஒதுக்கக்காடு வன வளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதையும், ஒட்டுசுட்டான், அம்பகாமம் பகுதியில் விமானப் படைத்தளம் அமைப்பதற்கு சட்டவிரோதமாக ஒதுக்கக் காடுகள் அழிக்கப்பட்டுள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஊழலை ஒழிப்போமெனும் கோசத்துடன் ஆட்சிபீடமேறிய இந்த அரசு, கடந்த காலத்தில் சட்டவிரோதமாக இடம்பெற்ற ஒதுக்கக்காடு அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும், கடந்த காலத்தில் முறையற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு வற்புறுத்திய அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் 03.06.2025 (இன்று) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட கள விஜயத்தின்போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக வன வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு முரணாக பொதுமக்களின் காணிகளைத் திருடி வருகின்றார்கள். 

பொதுமக்களின் குடியிருப்புக் காணிகளையும், அவர்களின் வயல் நிலங்களையும், வர்த்தமானி அறிவித்தல் முலம் சட்டத்திற்கு முரணான வகையில் வன ஒதுக்குப் பிரதேசங்களாக, தொல்லியல் ஒதுக்குப் பிரதேசங்களாக ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள்.

இதனால் இங்குள்ள மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்களில் குடியிருக்க முடியாமல், வயல் நிலங்களில் பயிரிட முடியாமல் இத்திணைக்களங்களால் துரத்தியடிக்கப்படுகின்றார்கள். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய அன்றாட உணவுத் தேவை, அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி என்பன மறுக்கப்படுகின்றன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஏ.சி.பாம் என்ற கிராமத்தில் 47 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், 1997 இல் ஜெயசிக்குறு இராணுவ நடடிக்கையின் மூலம் இவர்கள் இடம்பெயர்ந்தனர்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் யாவும் பூர்த்தியடைந்து விட்டதாக கூறுப்படுகின்ற நிலையில், இம்மக்கள் இன்னும் தங்கள் சொந்தக் கிராமத்தில் மீள் குடியேற்றப்படவில்லை. காரணம் கடந்த 2012ஆம் ஆண்டு இக்கிராமம் தண்டுவான் ஒதுக்கக்காடு என வன வளத் திணைக்களத்தால் சட்டத்திற்கு முரணாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையாகும்.

ஒரு பிரதேசத்தை வன ஒதுக்காக வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யும் முன், அதுபற்றி அப்பிரதேச மக்களுக்கு பிரதேச செயலாளரூடாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பான கருத்துக்கள் மக்களிடம் பெறப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் முரணாக, இவ்வாறெல்லாம் செய்யாமல் இப்பிரதேசம் தண்டுவான் வன ஒதுக்குப் பிரதேசமாக நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளுக்கு புறம்பாக வர்த்தமானப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திருட்டுத் திணைக்களம் இப்பிரதேசத்தை தண்டுவான் வன ஒதுக்குப் பிரதேசமாக 2012 இல் வர்த்தமானி அறிவித்தல் செய்யும் முன்பு, 1979ஆம் ஆண்டில் இப்பிரதேசம் இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு, நிலஅளவை வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ரொப்போப் பிபி 66 என்ற வரைபடத் தொகுதியினுள் இவ்வரைபடம் உள்ளது.

இந்தக் கிராமத்தைத் திட்டமிட்டு திருடும்போது வன வளத் திணைக்களத்திற்கு இது தெரிந்திருக்கவில்லை. இதேபோலத்தான் சட்டத்திற்கு முரணாக வன வளத் திணைக்களம் தமிழ் மக்களின் காணிளை வன ஒதுக்குப் பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவித்து வருகின்றார்கள்.

ஒதுக்காட்டில் அமைந்துள்ள சித்தாத்தன் குளம் எனப்படும் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை விடுவிக்க வன வளத் திணைக்களம் இதுவரை இணங்கவில்லை.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், வன ஒதுக்கு பிரதேசங்களை சிங்கள மக்களை மட்டுமே கொண்டகுடியேற்றத் திட்டமான போகஸ்வெவ உருவாக்குவதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை வன வளத் திணைக்களம் விடுவித்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரவின் அம்பகாமம் பகுதியில் இலங்கை விமானப் படையின் விமானப் படைத்தளம் அமைப்பதற்கு, ஒதுக்கப்பட்ட வனப் பகுதியிலிருந்து 8000 ஏக்கர் வனப் பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 

வன வளத் திணைக்களத்தின் அனுமதி இன்றி, குறித்த சட்ட ஏற்பாடுகள் எவற்றையும் பின்பற்றாது, இந்த அடர்வனப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், இங்குள்ள பெறுமதியான மரங்கள் இரகசியமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசு இது தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

சமகாலத்தில் நாம் மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் என்னவெனில் வன வளத் திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர் அதிகாரிகள் நீதிபதிகளாக மாறிவிட்டனர். வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலகங்கள் தோறும் வன ஒதுக்குப் பிரதேசங்களை விடுவிப்பதாகக்கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

திருடனே களவை விசாரிக்கும் நகைப்பிற்கிடமான இந்த நீதி வழங்கும் பொறிமுறை ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசிற்கு பேரவமானமாகும்.

இவ்விசாரணை மேற்கொள்ளவரும் அதிகாரிகள் கடந்த கால அரசாங்கங்களின் காலத்தில் ஊழலில் மூழ்கித்திளைத்தவர்களாவர். இவர்கள் இங்குள்ள ஒதுக்கு வனப் பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் பொய்யான தகவல்களை அரசிற்கு வழங்கி வருவதுடன், மாவட்டச் செயலாளர் உட்பட, தமிழ் அதிகாரிகளையும் இப்பொய்த் தகவல்களை ஏற்றுக்கொள்ளும்படி அதிகாரத்தோரணையில் மிரட்டியும் வருகின்றனர்.

கடந்த 2023.06.01 இல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், வன வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் வன வளப் பகுதிகளை விடுவிப்பதாகக்கூறி கூட்டமொன்றை ஏற்படுத்திய வன வள மற்றும், வனஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சமந்தி, வன வள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற தீர்மானங்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன், அத்தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விடுவிக்க முடியாதென அச்சுறுத்தியுள்ளார். 

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் கடமையாற்றிய இவர்களைப்போன்ற அதிகாரிகளை இந்த அரசாங்கம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நாங்கள் வனப் பகுதிகளை விடுவித்துத் தாருங்கள் எனக் கேட்டு, காடழிப்பிற்கு வழிகோரவில்லை. எங்கள் வீடுகளையும், வயல்களையும், தெருக்களையும் விடுவியுங்களென்றே கேட்கின்றோம். 

எமது மக்களின் நிலங்களை விடுவியுங்கள். எமது மக்கள் உழைப்பிற்குப் பழக்கப்பட்டவர்கள். உழைத்து வாழ்வார்கள். நிலங்களை விடுவிக்காதவரை அம்மக்களின் அன்றாட வாழ்விற்கான நிவாரணங்களை வழங்குங்கள். அவர்களின் குழந்தைகள் பசியுடன் இருக்கின்றனர்  என்றார்.

No comments:

Post a Comment