இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து மருந்து கொள்வனவு - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து மருந்து கொள்வனவு - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கங்களுக்கு இடையிலான கொள்கைத்திட்டத்தின் கீழ் மருந்து கொள்வனவுக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து மருந்து கொள்வனவு செய்வதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஊடாக தூதரக மற்றும் உயர்ஸ்தானிகராலயம் மட்டத்தில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின்போது 27/ 2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கங்களுக்கு இடையிலான கொள்கைத்திட்டத்தின் கீழ் மருந்து கொள்வனவுக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடமிருந்து மருந்து கொள்வனவு செய்வதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஊடாக தூதரக மற்றும் உயர்ஸ்தானிகராலயம் மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் முதல் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய மருந்து களஞ்சியசாலை, பிராந்திய மருந்து களஞ்சியசாலைகளின் மருந்து கையிருப்பு மற்றும் விநியோகம் நாளாந்தம் தரவு கட்டமைப்பின் அடிப்படையில் ஆராயப்படுகிறது.

மருந்து இறக்குமதியினால் தேசிய மருந்து உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய மட்டத்திலான மருந்து உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மருந்து இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மருந்து உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பகிரங்க விலைமனுக்கோரல் ஊடாகவே மருந்துகள் கொள்வனவு செய்யப்படும்.

இதற்காக நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வர்த்தகத்துறை அமைச்சு மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு ஆகிய அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் உள்ளடங்குகிறார்கள். ஆகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாகவே மருந்துகள் கொள்வனவு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment